ராகுல் காந்தி இல்லாமல்.. இனி துரும்பை கூட அசைக்க முடியாது.. வகையாக மோடிக்கு வைக்கப்பட்ட செக்.. அடடா
டெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்ததன் மூலம் பாஜகவிற்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது.
2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் கடந்த 2 வாரம் முன்பு வெளியானது. 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

240 இடங்களில் பாஜக வென்றுள்ளது இதனால் பாஜக ஆட்சி அமைக்க என்டிஏவில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஆதரவு தேவை. இது போல லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஆகியோரின் ஆதரவும் தேவை.
கிங் மேக்கர்கள்: 240 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட பாஜக பெரும்பான்மைக்கு 32 இடங்கள் குறைவாகவே உள்ளது. என். சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் முறையே 16 மற்றும் 12 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது அரசாங்கத்தை அமைப்பதில் முக்கியமான நபர்களாக உருவெடுத்து 'கிங்மேக்கர்களாக' உள்ளனர். இவர்களின் ஆதரவுடன்தான் மோடி பதவி ஏற்று உள்ளார்.
முக்கியமான பதவிகள்: மத்தியில் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் எதிர்க்கட்சி தலைவர், சபாநாயகர் பதவிகள் போன்ற பதவிகள் அதிக முக்கியத்துவம் பெற உள்ளன. இன்று சபாநாயகர் பதவிக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்ததன் மூலம் பாஜகவிற்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது.
என்ன நெருக்கடி:
1. இந்த பதவி என்பது மத்திய அமைச்சருக்கு இணையான பதவி.
2. ராகுல் காந்தி இனி பல தேர்வு கமிட்டிகளில் இருப்பார்.
3. தேர்தல் ஆணையர் தேர்வு தொடங்கி மனித உரிமை கமிட்டி தலைவர் தேர்வு வரை அனைத்திற்கும் இனி ராகுல் காந்தி ஒப்புதலும் தேவை.
இனி பெரும்பாலான தேர்வுகளுக்கு தேர்வுக் குழு இப்படித்தான் இருக்கும்:
1. பிரதமர் மோடி
2. எச்எம் அமித் ஷா
3. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி
4. ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
5. மக்களவை சபாநாயகர்
6. ராஜ்யசபா சபாநாயகர்
இவர்களில் ஏற்கனவே இரண்டு பேர் காங்கிரஸ் என்பதால் இந்த குழுவில் காங்கிரசின் குரல் உச்சம் பெற்றுள்ளது. மக்களவை சபாநாயகரும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வந்தால் அது பாஜகவிற்கு மிகப்பெரிய நெருக்கடியாக இருக்கும். இதன் காரணமாகவே ராகுல் காந்தி இல்லாமல் இனி துரும்பை கூட அசைக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.
இன்று தேர்தல்: இன்னொரு பக்கம் எதிர்பார்த்த படியே லோக்சபா சபாநாயகர் பதவி பிரச்சனைக்கு உள்ளாகி இருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி கிடைக்காத நிலையில் சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகளும் போட்டியிடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினிடம் பாஜகவினர் இரவோடு இரவாக போன் செய்து பேசியதாக தகவல்கள் வருகின்றன.
சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுவதாக இந்தியா கூட்டணியும் அறிவித்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (NDA) எதிர்க்கட்சியான இந்திய கூட்டணிக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில், இரு கூட்டணிகளும் தனித்தனியாக தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
கடும் போட்டி: ஜூன் 26 ஆம் தேதி, மக்களவை கூடும் போது, அடுத்த சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள், பாரதிய ஜனதா கட்சியின் ஓம் பிர்லாவை NDA வேட்பாளராகவும், காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷ் எதிர்க்கட்சி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் அதிக எம்பிக்கள் ஆதரவு பெறுபவர் சபாநாயகர் ஆவார்.
லோக்சபா சபாநாயகர் பதவிக்கு கோட்டாவில் இருந்து மூன்று முறை எம்.பி.யாக இருந்த பாஜக ஓம் பிர்லாவும், கேரளாவில் இருந்து நீண்ட காலம் லோக்சபா எம்.பி.யாக இருந்த கே.சுரேஷ் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் நேற்று ஜூன் 25ம் தேதி நடைபெற்றது. தேர்தல் இன்று ஜூன் 26ம் தேதி நடைபெறும்.












Click it and Unblock the Notifications