கடவுளின் தூதர் மோடி என்றால்.. கொரோனாவை விரட்டாமல் டார்ச் லைட் அடிக்க சொன்னாரே ஏன்? ராகுல் கேள்வி
டெல்லி: தான் ஒரு இறைத் தூதன் என நினைப்பதாகப் பிரதமர் மோடி கூறியது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், இதற்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் தற்போது வரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மே 25 மற்றும் ஜூன் 1ஆம் தேதி கடைசி இரண்டு கட்ட தேர்தல் நடக்கிறது.

இதில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் நாட்டில் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
மோடி: இதற்கிடையே சமீபத்தில் பிரபல ஆங்கில செய்தி ஊடகத்திற்குப் பேட்டி அளித்த பிரதமர் மோடி, தான் கடவுளால் அனுப்பப்பட்ட இறைத் தூதன் என்று உணர்ந்ததாகத் தெரிவித்தார். லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், பிரதமரின் இந்தப் பேச்சு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அந்த பேட்டியில் பிரதமர் மோடி கூறுகையில், "என் அம்மா உயிருடன் இருக்கும் வரை, நான் அவரது மகன்தான் என்று நான் நம்பினேன்.. ஆனால், அவர் இறந்த பிறகு, எனது அனைத்து அனுபவங்களையும் நினைத்துப் பார்க்கையில்.. கடவுள் தான் என்னை அனுப்பினார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இறைவன்: எனக்குள் இருக்கும் எனர்ஜி என் உடலில் இருந்து இருக்க முடியாது.. கடவுளால் எனக்கு வழங்கப்பட்டது என்றே நினைக்கிறேன். கடவுள் ஒரு நோக்கத்திற்காகவே எனக்கு இந்த திறன்கள், உத்வேகத்தைக் கொடுத்துள்ளார் என்று நான் நம்புகிறேன்... நான் ஒரு கருவியைத் தவிர வேறு எதுவும் இல்லை" என்றார்.
பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், இதற்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். இறைத் தூதன் என்றால் பிரதமர் மோடி ஏன் கொரோனா சமயத்தில் அதை ஒழிக்காமல் டார்ச் லைட் அடிக்க சொன்னார் எனக் கேள்வி எழுப்பினார். மேலும், வேறு யாராவது இதுபோல பேசினால்.. நிச்சயம் அவரை மருத்துவரிடம் தான் அழைத்துச் செல்வார்கள் என்றும் சாடியுள்ளார்.
ராகுல் காந்தி: பிரதமர் மோடி பேச்சுக்குப் பதிலடி கொடுத்துள்ள ராகுல் காந்தி, "நரேந்திர மோடி தனது நேர்காணலில் தன்னை இறைத் தூதர் என்கிறார். இந்த விஷயத்தை வேறு யாராவது ஒருவர் சொல்லி இருந்தால்.. அவர் நேராக மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டிருப்பார். ஆனால் இதைக் கேட்டு அவரது ஆதரவாளர்கள், ஆஹா கடவுளே அவரை நம் பிரதமராக அனுப்பியிருக்கிறார்கள் எனப் புல்லரித்துப் போகிறார்கள்.
கொரோனா சமயத்தில் இந்தியர்கள் கங்கை கடற்கரையில் இறந்து கிடந்தனர்.. பல ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தார்கள்.. ஆனால் கடவுளால் அனுப்பப்பட்ட இந்த இறைத் தூதன் உங்கள் மொபைல் ஃபோன் டார்ச் லைட்டை அடியுங்கள் என்றாரே.. அது அனைவருக்கும் நினைவு இருக்கும்" என்றார்.
தொழிலதிபர்கள்: தொடர்ந்து அதானி குறித்துப் பேசிய ராகுல் காந்தி, "நரேந்திர மோடி பொதுமக்களுக்காக பணியாற்றவில்லை.. அவர் அதானி, அம்பானி என 22 தொழிலதிபர்களுக்கு மட்டுமே வேலை செய்கிறார்.. இந்த தொழிலதிபர்கள் எதைக் கேட்டாலும், அதை நிமிடங்களில் பிரதமர் மோடி செய்து தருவார். ஆனால், இந்தியர்களுக்கான கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு என்று கேட்டால் பிரதமர் மோடி வாயைத் திறக்காமல் அமைதியாக இருக்கிறார்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications