ஆமா..கச்சத்தீவு மீட்புக்கு 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் என்னதான் செய்தீங்க? மோடியை தாக்கும் காங்கிரஸ்!
டெல்லி: கச்சத்தீவு மீட்பு பற்றி இப்போது பேசும் பாஜக 10 ஆண்டுகால ஆட்சியில் என்னதான் செய்தது என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
கச்சத்தீவு விவகாரம் தற்போது திடீரென லோக்சபா தேர்தல் களத்தில் பேசு பொருளாகி இருக்கிறது. கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விவரங்களைப் பெற்றிருந்தார். இந்த விவரங்களை முன்வைத்து பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு காங்கிரஸ் பதிலடி தந்து வருகிறது. கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: இலங்கையுடனான நட்புறவுக்காக 1974-ல் கச்சத்தீவு வழங்கப்பட்டது. பிரதமர் மோடியும் கூட, வங்கதேசத்துடன் எல்லைகளைப் பரிமாற்றம் செய்துதான் இருக்கிறார். 10 ஆண்டுகளில் இப்போது திடீரென எல்லை பிரச்சனை, இந்திய நிலப் பகுதி பற்றி எல்லாம் மோடி விழித்துக் கொண்டிருக்கிறார்.
2014-ல் உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி சொன்னது என்ன தெரியுமா? 1974-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி இலங்கைக்கு கச்சத்தீவு கொடுக்கப்பட்டுவிட்டது. இன்று அதை எப்படி திரும்பப் பெற முடியும்? கச்சத்தீவை மீட்க வேண்டும் எனில் யுத்தம்தான் நடத்த வேண்டும் என்றார் முகுல் ரோத்தகி.
சரி.. கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவு மீட்பு நடவடிக்கைகாக, கச்சத்தீவு சிக்கலுக்குத் தீர்வு காண மத்தியில் ஆளும் பாஜகவும் பிரதமர் மோடியும் என்னதான் செய்தார்கள்? ஏதேனும் ஒரு நடவடிக்கையாவது எடுக்கப்பட்டதா? இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், இந்தியாவின் எல்லை நிலப்பரப்பு 17,161 ஏக்கராக இருந்தது. இதில் வெறும் 7110 ஏக்கர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு சீட்டு கூட ஜெயிக்க முடியாத நிலையில்தான் பாஜக உள்ளது. இந்த விரக்தியில்தான் முடிந்து போன கச்சத்தீவு விவகாரத்தைப் பற்றி பாஜக பேசுகிறது.. பிரதமர் மோடி பேசுகிறார் என்றார்.












Click it and Unblock the Notifications