அஜய் மக்கானுக்கு ஆப்பு வைத்த குல்தீப்.. அதிரடி நடவடிக்கை எடுத்த காங். 'அங்க ஒருத்தர் இங்க ஒருத்தர்'!
டெல்லி : ராஜ்யசபா தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த ஹரியானா காங்கிரஸ் எம்.எல்.ஏ குல்தீப் பிஷ்னோய் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மக்கான் தோல்வியடைந்த நிலையில், கட்சி மாறி வாக்களித்த எம்.எல்.ஏவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது காங்கிரஸ் தலைமை.
காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்சி மாறி வாக்களித்ததும், ஒரு வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டதும், அஜய் மக்கானின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.
புதிய கட்சி தொடங்கும் கேசிஆர்.. பாஜகவை எதிர்க்க பயங்கர 'மாஸ்டர் ஸ்ட்ரோக்’ - அடுத்த வாரம் அறிவிப்பு?
ராஜ்ய சபா தேர்தல்
மாநிலங்களவையில் காலியாக உள்ள 57 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகினர். மீதமுள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்களுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. அதில் பா.ஜ.க 8 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 5 இடங்களையும் கைப்பற்றியது.
ஹரியானா
ஹரியானா மாநிலத்தில் 2 ராஜ்ய சபா எம்.பி பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் அஜய் மக்கான் போட்டியிட்டார். பாஜக சார்பில் கிரிஷன் லால் பன்வார் மற்றும் பாஜக ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர் நியூஸ் எக்ஸ் கார்த்திகேய சர்மா ஆகியோர் களத்தில் இருந்தனர். 2 இடங்களுக்கு 3 பேர் களத்தில் இருந்ததால் அங்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
கட்சி மாறி வாக்குப்பதிவு
ஹரியானாவில் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பாஜக, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மாவின் கோரிக்கையை ஏற்கக்கூடாது என்று காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதனால் ஹரியானாவில் 2 இடங்களுக்கும் நடந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு தாமதமாக முடிவு அறிவிக்கப்பட்டது.
தோல்விக்கு காரணம்
ஹரியானாவில் பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணன்லால் பன்வரும், பா.ஜ.க ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மாவும் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அஜய் மக்கான் தோல்வி அடைந்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்சி மாறி வாக்களித்ததும், ஒரு வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டதும், அக்கட்சியின் வேட்பாளர் அஜய் மக்கானின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.
எம்.எல்.ஏ சஸ்பெண்ட்
கட்சி மாறி வாக்களித்ததாக காங்கிரஸ் கட்சியின் ஆடம்பூர் தொகுதி எம்.எல்.ஏ குல்தீப் பிஷ்னோய் மீது புகார் எழுந்ததையடுத்து அவர் கட்சியிலிருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காங்கிரஸ் செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர் பதவி உள்ளிட்ட அனைத்து கட்சிப் பதவிகளில் இருந்தும் குல்தீப் பிஷ்னோய் நீக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக எம்.எல்.ஏ
இதேபோல, ராஜஸ்தானில் பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ ஷோபா ராணி குஷ்வாகா, கட்சி மாறி காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்ததாக புகார் எழுந்தது. அவர் கட்சி மாறி வாக்களித்த நிலையில் பாஜக ஆதரவுடன் நின்ற சுபாஷ் சந்திரா தோற்கடிக்கப்பட்டார். இதையடுத்து ஷோபா ராணி குஷ்வாகா பா.ஜ.க கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.