எரியும் மணிப்பூர்! மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஏன்? 3 கேள்வி கேட்ட காங்.எம்பி
டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் மவுன விரதத்தை கலைக்கவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததாக காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் விவாதித்தார்.
மணிப்பூரில் குக்கி மற்றும் மேய்தி இன மக்களிடையே கடந்த மே மாதம் முதல் வன்முறை நடந்து வருகிறது. தங்களையும் பழங்குடியின பட்டியலில் சேர்க்க மேய்தி மக்கள் கோரிக்கை எழுப்பிய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இன மக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் இரு தரப்பினரிடையே வன்முறை ஏற்பட்டது. அரசு பேருந்துகள், பொது சொத்துகள் சேதமடைந்தன, இரு சக்கர வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. ஆங்காங்கே வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இந்த வன்முறையை மணிப்பூர் மாநில அரசால் தடுக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வன்முறையை பயன்படுத்தி பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. அது போல் இரு பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்த காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
அங்கு பலர் உணவில்லாமல் தவித்து வருகிறார்கள். இந்த வன்முறையானது வெவ்வேறு வகையில் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேசவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.
அன்று முதல் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் இதற்கு இரு அவைகளிலும் அனுமதி இல்லாததால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவை அன்றாடம் ஒத்தி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன.
அதன் மீது இன்றைய தினம் விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவாதத்தின் ஆரம்பத்திலேயே அமர்க்களமாக இருந்தது. முதலில் ராகுல் காந்தியை பேசுமாறு பாஜக எம்பிக்கள் கூச்சலிட்டனர். ஆனால் பிரதமர் இல்லாமல் அவர் பேசமாட்டார் என கூறி அ்நத விவாதத்தின் மீது காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் பேசினார்.
அவர் கூறுகையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டோம். மணிப்பூர் மக்களுக்கான நீதிக்கானது. "இந்தியா" எம்பிக்கள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை மணிப்பூர் பிரச்சினைக்காக கொண்டு வந்துள்ளனர். மணிப்பூருக்கு நீதி தேவை. நாடாளுமன்றத்தில் பேசவே கூடாது என பிரதமர் மவுன விரதம் இருந்து வருகிறார்.
அவரது மவுனத்தை கலைக்கவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளோம். அவருக்காக 3 கேள்விகளை மட்டுமே நாங்கள் கேட்கிறோம்.
1. இன்று வரை பிரதமர் மோடி மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை?
2. மணிப்பூர் விவகாரம் குறித்து பேசுவதற்கு பிரதமர் 80 நாட்கள் எடுத்து கொண்டது ஏன். பற்றி எரியும் மணிப்பூர் குறித்து வெறும் 30 வினாடிகள் மட்டுமே பேசியது ஏன்?
3. மணிப்பூர் முதல்வரை இன்று வரை பிரதமர் நீக்காதது ஏன்?
இரட்டை என்ஜின் அரசால் மணிப்பூரில் தோல்வி ஏற்பட்டுள்ளது என்பதை பிரதமர் ஒப்புக் கொள்ள வேண்டும். அதனால்தான் மணிப்பூரில் 150 பேர் பலியாகிவிட்டனர். 5000 வீடுகள் எரிக்கப்பட்டன, 60 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர். 6500 முதல் தகவல் அறிக்கைகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்கூட்டியே அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய மணிப்பூர் முதல்வரோ தற்போது 2 - 3 நாட்களாகத்தான் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என கவுரவ் கோகாய் பேசினார்.












Click it and Unblock the Notifications