அந்த ’இரண்டு’ வார்த்தைகள் மிஸ் ஆகுதே.. பளபள பாஜக தேர்தல் அறிக்கை..! மோடிக்கு ராகுல் வைத்த செக்..!
டெல்லி: பாஜகவின் தேர்தல் அறிக்கை மற்றும் நரேந்திர மோடியின் உரையில் இரண்டு வார்த்தைகள் இல்லை அது, பணவீக்கம் மற்றும் வேலையின்மை என்ற வார்த்தைகள் தான் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளான இன்று வெளியிட்டு இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

சங்கல்ப் பத்ரா என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த தேர்தல் அறிக்கையில் எதிர்பார்த்தது போலவே பல அதிரடியான அறிவிப்புகள் இடம் பெற்று இருக்கின்றன. ஏற்கனவே கணித்தபடி ஒரு புதிய அஸ்திரத்தையும் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்திருக்கிறது.
முக்கிய திட்டங்கள்: ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும், நாடு முழுவதும் பொது வாக்காளர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும், பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் 80% தள்ளுபடியுடன் மருந்துகள் கிடைக்கும், 70 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கொண்டுவரப்படும் என வாக்குறுதி, முத்ரா கடன் உதவி 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தப்படும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம்
புல்லட் ரயில் சேவை: அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும், பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ஆகிய முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், குறைந்த விலையில் பைப் மூலமாக கேஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும், இலவச உணவு தானியம் வழங்கப்படும் திட்டம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும், திருநங்கைகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என வாக்குறுதி, வடகிழக்கு மாநிலங்களுக்கு புல்லட் ரயில் சேவை, படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.
பிரதமர் மோடி: நாடு முழுவதும் மாணவர்களுக்கு நிரந்தர அடையாள எண். தொன்மையான மொழி தமிழை உலகளவில் கொண்டு செல்ல நடவடிக்கை. தமிழ் மொழி பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்தப்படும், கிராமங்களுக்கு பைப் லைன் மூலம் எரிவாயு விநியோகம் ஆகிய திட்டங்களும் அறிமுகப்படுப்பட்டுள்ளன. முன்னதாக இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகியோரை மையமாக கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்குவது குறித்து நாங்கள் பேசுகிறோம்.. இளைஞர்களின் கனவை நனவாக்க பணியாற்றுகிறோம் என தெரிவித்திருந்தார்.
விமர்சனம்: இந்நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையை எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இதுதொடர்பாக பேசிய டெல்லி அமைச்சர் அதிஷி, 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி, இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு என வாக்குறுதி அளித்தார் இன்று அந்த வேலைகளின் புள்ளிவிவரங்களை இந்த அறிக்கையில் கொடுக்க கூட அவர்கள் தயாராக இல்லை எனக் கூறியிருந்தார். இதேபோல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி, பாஜகவின் தேர்தல் அறிக்கை மற்றும் நரேந்திர மோடியின் உரையில் இரண்டு வார்த்தைகள் இல்லை அது, பணவீக்கம் மற்றும் வேலையின்மை என்ற வார்த்தைகள் தான் என விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications