திடீர் தாக்குதல்.. காங்கிரஸ் எம்.பி.யின் தலைப்பாகை அகற்றம் - பரபரத்த டெல்லி
டெல்லி: விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி ரவ்னீட் சிங் பிட்டு மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதுடன், அவரது தலைப்பாகையை அகற்றியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக, பல நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் லூதியானா தொகுதி எம்.பி. ரவ்னீட் சிங் பிட்டு, அமிர்தசரஸ் எம்பி குர்ஜீத் சிங் அஜ்லா மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ குல்பிர் சிங் சிரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது, மூவரும் குரு தேக் பஹதூர் அவர்களின் நினைவகத்துக்கு சென்றிருந்த போது, அவர்கள் மீது மர்ம நபர்கள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து எம்.பி ரவ்னீத் தனது பேஸ்புக்கில், சில மர்ம நபர்கள், அங்கு நிலவிய அமைதியான சூழலை கெடுக்கும் நோக்கத்துடன் எங்கள் மூன்று பேரும் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். குறிப்பாக, தன்னை கீழே தள்ளி, தனது தலைப்பாகையை பிடித்து இழுத்ததாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தனது தலைப்பாகை அகற்றப்பட்டதுடன், போராட்டக்காரர்கள் எம்.எல்.ஏ குல்பிர் சிங் சிராவின் தலைப்பாகையையும் அகற்றியதாக ரவ்னீட் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலையடுத்து, சிலர் மூவரையும் காப்பாற்றி காரில் ஏற்றிய பிறகும், போராட்டக்காரர்கள் கார் கண்ணாடியை கம்புகள் கொண்டு உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
ஆனால், எம்.பி. பிட்டு தாக்கப்பட்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.
அவரும் தனது பேஸ்புக் பதிவில், தற்போது நலமுடன் இருப்பதாகவும், இந்த சம்பவத்திற்கு சில மர்ம நபர்களே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
1995 ல் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பஞ்சாப் முதல்வர் பீந்த் சிங்கின் பேரன் ரவ்னீட் சிங் பிட்டு தாக்கப்பட்டு அவரது தலைப்பாகை அகற்றப்பட்டிருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications