பிரச்னையை சரி செய்ய தெரியாத கார் மெக்கானிக்... நிர்மலா சீதாராமனை விமர்சிக்கும் சசி தரூர்
டெல்லி: திறமை இல்லாத கார் மெக்கானிக் எப்படி பிரச்னைகளை சரி செய்ய தெரியாமல் இருப்பாரோ, அதேபோல பாஜக அரசு செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் ட்வீட் செய்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். கொரோனா பரவல் காரணமாக இந்தப் பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

கொரோனா பரவலுக்குப் பின் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் என்பதால் இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. 2021-2022 நிதியாண்டில் சுகாதாரத் துறைக்கு 2.23 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். இதேபோல பல முக்கிய அறிவிப்புகளையும் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நிர்மலா சீதாராமனை திறமையில்லாத கார் மெக்கானிக்குடன் ஒப்பிட்டு காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "திறமையில்லாத கார் மெக்கானிக் ஒருவர் தனது வாடிக்கையாளரிடம், உங்கள் கார் பிரேக்கை என்னால் சரி செய்ய முடியவில்லை. இதனால், காரின் ஹாரன் சத்தத்தை அதிகப்படுத்தியுள்ளேன் என கூறுவதை இந்த பாஜக அரசு நினைவூட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
அதாவது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகளுக்குப் பதிலாக வெறும் பெரிய அறிவிப்புகளை மட்டுமே பாஜக அரசு வெளியிட்டு வருவதாக சசி தரூர் கிண்டல் செய்துள்ளார். இவரைப் போலவே காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி. ப. சிதம்பரம், திமுகவின் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் மத்திய பட்ஜெட்டை விமர்சித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications