பட்ஜெட் வாசிக்கும் போது ஒலித்த 'மோடி மோடி' கோஷம்.. பதிலடி கொடுத்த காங்..என்ன சொல்லிருக்காங்க பாருங்க
நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த போது பாஜக எம்.பிக்கள் 'மோடி மோடி' என கோஷம் எழுப்பினர்.
டெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்த போது 'மோடி மோடி' என பாஜக எம்.பிக்கள் கோஷம் எழுப்பினர். அதற்கு பதிலடியாக காங்கிரஸ் எம்.பிக்கள் சமீபத்தில் முடிந்த பாரத் ஜோடோ யாத்திரை சுட்டிக்காட்டி கோஷம் எழுப்பினர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளன. மொத்தம் இரு அமர்வுகளாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது.

வருமான வரி உச்சவரம்பு
நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் நடுத்தர மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளில் ஒன்றாக இருந்த வருமான வரி உச்ச வரம்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
புதிய வரிமுறையை பின்பற்றுபவர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை வருமான வரி இல்லை. அதேபோல், புதிய வரி முறையைப் பின்பற்றுவோர் தகுந்த ஆவணங்களைக் காட்டி 7 லட்ச ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

87 நிமிடங்கள் மட்டுமே உரை
வழக்கமாக பட்ஜெட் உரை என்பது சற்று நீண்டதாக இருக்கும். கடந்த ஆண்டு, நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை 92 நிமிடங்கள் நீடித்தது. நடப்பு ஆண்டில் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை 87 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. கடந்த 2021இல் கொரோனாவுக்கு பிந்தைய முதல் பட்ஜெட்டில், நிதி அமைச்சரின் பட்ஜெட் உரை சுமார் ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் நீடித்தது. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் உரையில் இதுதான் மிகவும் குறைந்த நேரத்தில் முடித்துக்கொள்ளப்பட்டதாகும்.

திடீரென மோடி மோடி என கோஷம்
பட்ஜெட் உரையை நீண்ட நேரம் வாசித்தவரும் நிர்மலா சீதாராமன் தான் என்பது கவனிக்கத்தக்கது. கடந்த 2020 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 1 மணி நேரம் 40 நிமிடங்கள் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை நீடித்தது. இது ஒருபக்கம் இருக்க நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது பாஜக எம்.பிக்கள் திடீரென மோடி மோடி என கோஷம் எழுப்பினர். பாஜக எம்.பிக்களின் இந்த கோஷத்தை எதிர்பார்க்காத காங்கிரஸ் எம்.பிக்கள் சற்றும் தாமதிக்காமல் ஜோடோ ஜோடோ பாரத் ஜோடோ யாத்திரை என பதில் கோஷம் எழுப்பினர்.

முழு தயார் நிலையில் காங்கிரஸ்
பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு தக்க பதிலடி கொடுக்க முழு தயார் நிலையில் காங்கிரஸ் கட்சி வந்திருப்பதை காட்டும் வகையிலேயே இந்த நிகழ்வு அமைந்து இருந்தது. நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு இன்மை பிரச்சினை என பல்வேறு முக்கிய பிரச்சினைகளை மையப்படுத்தி கேள்விகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், பட்ஜெட் கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது எனத்தெரிகிறது.

124 முறை மேஜையை தட்டி வரவேற்ற மோடி
அதானி விவகாரம், பிபிசி ஆவணப்பட விவகாரம் உள்ளிட்டவைற்றை எழுப்பியும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசிக்கும் போது பிரதமர் மோடி சுமார் 124 முறை மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தார். அதேபோல நிர்மலா சீதாராமன் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் போது பாஜக எம்.பிக்கள் வரவேற்பு தெரிவிக்கும் விதமாக மேஜையை தட்டினர்.












Click it and Unblock the Notifications