காங்கிரஸ்+திமுக.. அந்தமான் நிகோபாரில் பாஜகவை அடித்து நொறுக்கிய கூட்டணி! பெரிய வெற்றி!
ஸ்ரீ விஜய புரம்: அந்தமான் நிகோபார் தீவுகளின் போர்ட் பிளையர் நகராட்சி மன்றத் தேர்தலில் (PBMC), பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் மற்றும் திமுக இணைந்து 13 இடங்களைப் பிடித்து, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளன. இதன் மூலம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு போர்ட் பிளையர் நகராட்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மேயராகப் பொறுப்பேற்றுள்ளார்.

- காங்கிரஸ் (INC): 12 இடங்கள்
- திமுக (DMK): 1 இடம்
- பாஜக (BJP): 9 இடங்கள்
- தெலுங்கு தேசம் (TDP): 2 இடங்கள்
புதிய மேயர்
காங்கிரஸ் கட்சியின் வசந்தா முத்துராமன், போர்ட் பிளையர் நகராட்சியின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தலைநகர் பகுதியில் பாஜகவின் ஆதிக்கத்தை முறியடித்து காங்கிரஸ் மேயர் பதவியைக் கைப்பற்றியது அக்கட்சிக்கு ஒரு முக்கிய அரசியல் வெற்றியாகக் கருதப்படுகிறது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தவும் அந்தமான் தீவுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அந்தமான் சென்ற ராகுல் காந்தி, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தனது பயணத்தின் அடுத்த கட்டமாக, நாளை அவர் நிகோபர் தீவுகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். அங்குள்ள பழங்குடியின கவுன்சில் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச உள்ளார்.
அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் நிலவும் உள்ளூர் பிரச்சனைகள் மற்றும் பழங்குடியினரின் உரிமைகள் குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், இந்த வெற்றி மற்றும் அவரது வருகை அந்தப் பிராந்தியத்தில் காங்கிரஸின் செல்வாக்கை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications