அமலாக்கத்துறை முன் ராகுல்... தீவிர ஆலோசனையில் தலைவர்கள்... தலைநகரில் பலத்தை காட்ட திட்டமிடும் காங்.
டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் வரும் ஜூன் 13ஆம் தேதி ராகுல் காந்தி ஆஜராக உள்ள நிலையில், தலைநகரில் காங்கிரஸ் கட்சியின் பலத்தை காட்ட தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகயின் ஒபங்கு பரிமாற்ற வழக்கில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றுள்ளதாக வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் வரும் ஜூன் 13ஆம் தேதி ராகுல் காந்தி ஆஜராகுவார் என்று கூறப்படுகிறது.

நேஷன்ல் ஹெரால்டு வழக்கு
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனம் சார்பாக நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியாகியது. இதற்கு காங்கிரஸ் கட்சி ரூ.90- கோடி கடன் கொடுத்தது. இருந்தும் அந்த பத்திரிகை நிறுத்தப்பட்டது. இதன்பின்னர் கடந்த 2010ஆம் ஆண்டு அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவன பங்குகள் யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டன. இந்த நிறுவனத்தின் 76% பங்குகள் சோனியா காந்தி குடும்பத்தினரிடம் உள்ளன. இந்த பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சு.சாமி வழக்கு தொடர்ந்தார். இந்தநிலையில் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் அன்னிய செலாவணி பணமோசடி நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம்
ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகவுள்ளதை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி டெல்லியில் தனக்கு செல்வாக்கை காட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் உயர்மட்ட தலைவர்களின் கூட்டம் நடைபெற்றதாகவும், மாலையில் காணொலி வாயிலாக மாநில அளவிலான கூட்டம் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

என்ன திட்டம்?
ராகுல் காந்தி வீட்டில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு புறப்படும் போது, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பெரும் திரளாக அவருடன் பேரணியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அன்றைய நாளில் நாடு முழுவதும் பேரணி மற்றும் போராட்டம் நடத்துவதற்கான திட்டங்களை இறுதி மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி விமர்சனம்
அமலாக்கத்துறையினரின் சம்மன் குறித்து காங்கிரஸ் கட்சி தரப்பில், இது பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதரவற்றவை. காங்கிரஸ் கட்சி தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி நிச்சயம் அமலாக்கத்துறை முன் ஆஜராகுவார்கள். அவர்களிடம் மறைக்க எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications