அம்பானி, அதானியை தாக்கும் மோடி! தோல்வி பயமா? ஆடுதா பிரதமர் பதவி? திருப்பி அடிக்கும் காங்கிரஸ்!
டெல்லி: தொழிலதிபர்கள் அம்பானி, அதானியை தாக்கி பிரசாரம் செய்யும் பிரதமர் மோடிக்கு பதவி ஆட்டம் காண்பது புரிந்துவிட்டது; தோல்வி பயத்தில்தான் நண்பர்களான அதானி, அம்பானியையே பிரதமர் மோடி விமர்சிக்கிறார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர்.
தெலுங்கானாவில் இன்று தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி திடீரென தொழிலதிபர்களான அம்பானி, அதானி ஆகியோரை தாக்கிப் பேசியது பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது. தெலுங்கானாவில் பேசிய மோடி, ராகுல் காந்தி 5 இளவரசர்களைப் பற்றியே எப்போதும் பேசுவார். அம்பானி, அதானி பற்றி பேசிக் கொண்டே இருந்தவர் இப்போது எல்லாம் பேசுவதே இல்லை. அதானி, அம்பானியிடம் இருந்து எவ்வளவு கறுப்புப் பணத்தை வாங்கினீர்கள்? லோக்சபா தேர்தலுக்காக எவ்வளவு நன்கொடை பெற்றீர்கள்? 5 ஆண்டுகளாக தொடர்ந்து விமர்சித்துவிட்டு இப்போது ஒரே இரவில் கடும் அமைதியாக இருப்பது ஏன்? ஏதோ தவறாக இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது என்றார்.

இதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அளித்த பதில்: பிரதமர் மோடி தொடர்ந்து முரண்பட்ட வகையில் பேசி வருகிறார். லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப் போகிறது என்பதை பிரதமர் மோடி உணர்ந்துவிட்டார். பிரதமர் பதவி ஆட்டம் காணுகிறதே என்பதற்காக நேற்றைய நண்பர்களையே விமர்சிக்கவும் தொடங்கிவிட்டார் மோடி. இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.

காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியதாவது: அம்பானி, அதானியைப் பற்றி ராகுல் காந்தி பேசுவதே இல்லை என்கிறார் பிரதமர் மோடி. ராகுல் காந்தி ஒவ்வொரு நாளும் அம்பானி, அதானியைப் பற்றித்தான் பேசுகிறாரே.. மக்கள் மன்றத்தில் அம்பானி, அதானி, மோடி குறித்த உண்மைகளைத்தான் வைத்துக் கொண்டே இருக்கிறாரே.. ஒவ்வொரு நாளும் அம்பானி -அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் சக்திகளுடன் மோடி எப்படி உறவு வைத்திருக்கிறார் என பேசுகிறாரே ராகுல் காந்தி.. அம்பானி, அதானி என நண்பர்களுக்காக மட்டும் ரூ16 லட்சம் கோடி கடன்களை மோடி தள்ளுபடி செய்த உண்மையை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொன்னவரே ராகுல் காந்தி தானே.. அந்த ரூ16 லட்சம் கோடியை தள்ளுபடி செய்யாமல் இருந்திருந்தால் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலையே செய்திருக்கமாட்டார்களே.. இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.












Click it and Unblock the Notifications