சான்ஸ் கிடைச்சா வெளுத்தெடுப்பாரே.. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராகிறார் ராகுல் காந்தி?
டெல்லி: காங்கிரஸை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி அதிகமான இடங்களைப் பெற்றுள்ள நிலையில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்ய வேண்டும் என்ற குரலும் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களைப் பெற்று 'கூட்டணி' ஆட்சியை அமைக்கிறது. டெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் நரேந்திர மோடி, நாடாளுமன்ற குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து நாளை மறுநாள் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி கணிசமான இடங்களைப் பெற்றது. இதனால் 400 இடங்களில் வெல்வோம் என்ற பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்கள் கூட கிடைக்கவில்லை.
இந்தியா கூட்டணி: இந்தியா கூட்டணிக்கு 235 இடங்கள் கிடைத்துள்ளன; காங்கிரஸ் 100; சமாஜ்வாதி 37; திரிணாமுல் காங்கிரஸ் 29; திமுக 22; உத்தவ் சிவசேனா 9; சரத்பவார் என்சிபி 8; சிபிஎம் 4; ஆர்ஜேடி 4; சிபிஐ 2; முஸ்லிம் லீக் 3; சிபிஎம்எல் 2; விசிக 2 ;ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 3 ; தேசிய மாநாட்டு கட்சி 2; கேரளா காங்கிரஸ் 1; ஆர்எல்பி 1; பாரத் ஆதிவாசி கட்சி 1; மதிமுக 1; ஆம் ஆத்மி 3; ஆர்எஸ்பி 1.
100 எம்பிக்களுடன் காங்கிரஸ்: கடந்த 2 லோக்சபா தேர்தல்களில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்கவில்லை. லோக்சபாவில் மொத்த எம்பிக்களில் 10% எம்பிக்களைக் கொண்ட கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படும். கடந்த 2 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியால் இந்த இடங்களைக் கூடப் பெற முடியவில்லை. 2014-ல் 44 இடங்களையும் 2019-ல் 52 இடங்களையும் தான் காங்கிரஸ் பெற்றிருந்தது. ஆனால் தற்போது 100 எம்பிக்களைக் கொண்ட கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது. இதனால் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவி காங்கிரஸுக்கு உறுதியானது.
என்ன செய்வார் எதிர்க்கட்சித் தலைவர்?: எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது ஆளும் அரசாங்கத்துக்கு சவால் விடுக்கக் கூடியதாகும். அரசு சார்ந்த முக்கிய குழுக்களில் எதிர்க்கட்சித் தலைவர் இடம் பெறுவதும் வழக்கம். அதேபோல தகவல் ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் நியமனத்திலும் எதிர்க்கட்சித் தலைவருக்கு முக்கிய பங்கு உண்டு.
எதிர்க்கட்சித் தலைவராக ராகுல்: இதனால் தற்போதைய லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. தமிழக காங்கிரஸ் எம்பி டாக்டர் விஷ்ணுபிரசாத் முதலில் இந்த கோரிக்கையை முன்வைத்தார். தற்போது கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் உள்ளிட்டோரும் இதனை வலியுறுத்தி உள்ளனர். ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராவதையே இந்தியா கூட்டணித் தலைவர்களும் விரும்புவதாக கூறப்படுகிறது.
ஆணித்தரமான அட்டாக்: லோக்சபாவில் எந்த ஒரு பதவியும் வகிக்காமல் சாதாரணம் எம்பியாக இருந்து கொண்டே முந்தைய மோடி அரசை வெளுத்தெடுத்தவர் ராகுல் காந்தி. அப்படி பேசியதுதான் "உங்கள் வாழ்நாளில் நீங்கள் ஒருபோதும் தமிழக மக்களை ஆள மாட்டீர்கள். அதை உங்களால் செய்ய முடியாது" என்ற ஆணித்தரமான வாதம். அண்மையில் இந்த பழைய வீடியோ டிரெண்டிங்கானது. பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக லோக்சபாவில் ராகுல் காந்தி கோலோச்சுவார் என்பது எதிர்க்கட்சித் தலைவர்களின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications