மத்திய விவசாய சட்டங்களுக்கு எதிராக...காங்கிரஸ் ஆட்சி மாநிலங்களில் புதிய மசோதா!!
டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் விவசாய சட்டங்களை ரத்து செய்யும் வகையில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் புதிய மசோதா அறிமுகம் செய்யும் பணியில் மாநில அரசுகள் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யும் வகையில் புதிய மசோதாக்களை காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று அந்தக் அக்ட்சியின் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டு இருந்தார்.

இதன் அடிப்படையில் இந்த மசோதாவுக்கான வரைவு நகல் ஒன்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை சிறப்பு சட்டபேரவையை கூட்டி நிறைவேற்ற திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
குறைந்தபட்ச ஆதரவு விலையை புதிய சட்டத்தின் மூலம் மறுக்காமல் வழங்குவதற்கு இந்த புதிய மசோதா உதவும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த மசோதாவுக்கு விவசாயிகள் உரிமை மற்றும் சிறப்பு பாதுகாப்பு மசோதா 2020 என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் மாநிலத்தில் எப்போது விவசாய சட்டம் அமல்படுத்தப்படும் என்பதை மாநில அரசுகளே முடிவு செய்யும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவாக எந்த தனியாரும் தானியங்களை கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்களை கடுமையாக காங்கிரஸ் கட்சி எதிர்த்து இருந்தது. இந்த நிலையில் விவசாயிகளை காப்பாற்றுவதற்கு இந்த மசோதா உதவும் என்று கருதுகிறது. மத்திய அரசின் புதிய சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநிலங்களில் கடந்த மூன்று நாட்களாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிராக்டர் பேரணியில் ஈடுபட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications