தாராள கட்சி நிதி...சோனியா, ராகுலை மிஞ்சிய பெருந்தலைகள்...அம்பலப்படுத்திய தேர்தல் கமிஷன்
டெல்லி : சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை விட கட்சியின் ஜி 23 தலைவர்கள் அதிக அளவில் கட்சிக்கு நிதி அளித்துள்ளனர். இது தேர்தல் கமிஷன் வெளியிட்ட கட்சி நிதி தொடர்பான அறிக்கையின் மூலம் அம்பலமாகி உள்ளது.
2019 -20 ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக அளவில் நிதி அளித்தவர்களின் பட்டியலை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. 352 பேர் கொண்ட இந்த பட்டியலில் பலர் பல முறை கட்சிக்கு நிதி அளித்துள்ளனர். இவர்களில் ஜி 23 எனப்படும் காங்கிரசின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை விட அதிக அளவில் கட்சிக்கு நிதியை வழங்கி உள்ளனர்.

தேர்தல் கமிஷன் வெளியிட்ட பட்டியலின்படி கட்சி தலைவரான சோனியா காந்தி, ரூ.50,000 வழங்கி உள்ளார். முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ரூ.54,000 வழங்கி உள்ளார். அதே சமயம் மூத்த தலைவர்களான 23 பேரில் 5 பேர் ராகுல் காந்தி அளித்த தொகை அல்லது அதை விட அதிகமான தொகையை கட்சி நிதியாக வழங்கி உள்ளனர்.
உதாரணமாக கட்சியில் செல்வாக்கு மிகுந்தவர்களில் ஒருவரான கபில் சிபல் ரூ.3 கோடி நிதி வழங்கி உள்ளார். மற்றவர்களை விட இவர் தான் அதிக தொகையை கட்சிக்கு வழங்கி உள்ளார். இவரைப் போல் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சசிதரூர், மிலிந்த் தியோரா, ராஜ்பாபர் ஆகியோரும் கட்சிக்கு அதிக நிதி அளித்தவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ராஜ்பாபர் ரூ.1.08 லட்சமும், மிலிந்த் தியோரா ரூ.1 லட்சமும், குலாம் தநி ஆசாத், ஆனந்த் சர்மா, சசிதரூர் ஆகியோர் ராகுல் காந்தி அளித்த தொகையான ரூ.54,000 ஐ கட்சிக்காக வழங்கி உள்ளனர். இந்த ரூ.54,000 என்ற தொகை பல முறை அளிக்கப்பட்ட தொகையாக பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
இவர்கள் தவிர நிதி அளித்தவர்கள் பட்டியலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி, மறைந்த மோதிலால் வயோரா, ்கமது பட்டேல், முன்னாள் மத்திய அமைச்சர் பிரீனித் கவுர், அதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. பாஜக.,வில் இணைந்துள்ள ஜோதிராதித்ய சிந்தியா, ரூ.54,000 வழங்கி உள்ளார்.
இந்த அறிக்கையின்படி 2019-20 காலகட்டத்தில் காங்கிரஸ் பெற்ற மொத்த கட்சி நிதி ரூ.139 கோடி. நிதி அளித்த நிறுவனங்களில் அதிகபட்சமாக பாரதி ஏர்டெல் ரூ.31 கோடியும், ஐடிசி ரூ.13 கோடியும், ஐடிசி இன்போடெக் ரூ.4 கோடியும் வழங்கி உள்ளன. 2018 - 19 ல் காங்கிரஸ் தேர்தல் நிதியாக பெற்ற தொகை ரூ.146 கோடியாகும்.
ஆண்டுதோறும் ரூ.20,000 க்கு மேல் நிதி அளித்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான விபரங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் அளிக்க வேண்டும். இதன்படி ஜனவரி மாதத்தில் காங்கிரஸ் அளித்த அறிக்கையின் மூலம் இது தெரிய வந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு எவரும் ரூ.20,000 க்கு மேல் நிதி அளிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications