தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை! டிரம்ஸ் அடித்து போராட்டம் நடத்தும் காங்கிரஸ்! முழு தகவல்
டெல்லி: நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இதற்காக மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது.
உக்ரைன் போர் காரணமாகக் கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 130 டாலரைத் தாண்டி உள்ளது.
இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை பெரியளவில் மாற்றம் இல்லாமலேயே தொடர்ந்து வந்தது. 5 மாநில காரணமாகவே பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

பெட்ரோல் டீசல் உயர்வு
5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரும் கூட அடுத்த சில நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமலேயே இருந்தது. ரஷ்யாவிடம் இருந்து நேரடியாக இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது, இதனால் கச்சா எண்ணெய் விலை பெரியளவில் உயர வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது. இருப்பினும், சுமார் 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலை கடந்த வாரம் மீண்டும் உயர்த்தப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை 3.20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

காங்கிரஸ் போராட்டம்
இந்தச் சூழலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, வரும் வியாழக்கிழமை அன்று நாடு தழுவிய போராட்டத்தைக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் மத்திய அரசு பொதுமக்களுக்குத் துரோகம் செய்துள்ளதாகச் சாடியுள்ளது. பெட்ரோல், மற்றும் கேஸ் சிலிணடர்கள் விலை உயர்வைக் கண்டித்து டிரம்ஸ் உள்ளிட்ட மேள தாளங்களைத் தட்டி போராட்டம் நடத்த உள்ளதாகக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

காங்கிரஸ் சாடல்
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, "வரும் மார்ச் 31ஆம் தேதி காலை 11 மணிக்கு, கேஸ், பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராகக் காது கேளாத பாஜக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கேஸ் சிலிண்டர்களை மாலையாக அணிவித்தும், மேள தாளங்கள், வாத்தியங்கள் ஏந்தியும் மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் போராட்டம் நடத்துவார்கள்" என்றார்.

விலை உயர்வு
கொரோனா பெருந்தொற்று சமயத்தில் நாடு முழுவதும் பாஜக சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கைதட்டி பாத்திரங்கள் மூலம் சத்தம் எழுப்பும்படி பிரதமர் நரேந்திர மோடி மக்களைக் கேட்டுக் கொண்டார். இதை வைத்தே காங்கிரஸ் கட்சி இப்போது விலையேற்றத்திற்கு எதிராகப் போராட்டத்தை அறிவித்துள்ளது. சனிக்கிழை பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 பைசா உயர்ந்துள்ள நிலையில், கடந்த 5 நாட்களில் 4 முறை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி
இதற்கிடையே உத்தரப் பிரதேசத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள பாஜக அரசைக் காங்கிரஸின் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார். மகாராஜா அரண்மனைக்குத் தயாராகிறார் என்றும் அதே நேரத்தில் குடிமக்கள் பணவீக்கத்தில் தத்தளிக்கிறார் என்றும் ராகுல் காந்தி சாடியுள்ளார். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியதன் மூலம் மட்டும் பாஜக அரசு எட்டு ஆண்டுகளில் ₹ 26 லட்சம் கோடி சம்பாதித்துள்ளதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. தொடர்ந்து உயரும் எரிபொருள் விலைக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி வரும் மார்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரை நாடு தழுவிய அளவில் மூன்று கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications