“தங்கல்” நினைவிருக்கா? பிரியங்கா காந்தி படத்தை விமர்சித்த பாஜக மல்யுத்த வீராங்கனை.. காங்கிரஸ் பதிலடி
டெல்லி: பாஜக எம்பியின் பாலியல் துன்புறுத்தல்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை சந்தித்து பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்த நிலையில் அவரை விமர்சித்த மல்யுத்த வீராங்கனை பபிதா போகத்தை காங்கிரஸ் பதிலடி கொடுத்து உள்ளது.
பாஜகவை சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் என்பவர் உத்தரப் பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் WFI எனப்படும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக மூன்றாவது முறையாக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில்தான் மல்யுத்த பயிற்சி பெற்று வரும் இளம் வீராங்கனைகளை பாலியல் ரீதியாக பிரிஜ் பூஷன் சரண் சிங் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை கண்டித்து இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் உள்ளிட்டோர், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தை தொடங்கினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அப்போதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவர்கள் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இந்த நிலையில், மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் விசாரணை குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு மீது வீரர்கள் தொடக்கத்தில் நம்பிக்கை வைத்து போராட்டத்தை நிறுத்தினர்.
ஆனால், மாதங்களை கடந்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்த வீரர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக மீண்டும் அதே டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் குதித்து உள்ளனர். தொடர்ந்து இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீரர்களுக்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவர்களை நேரில் சந்தித்தும் அரசியல் தலைவர்கள் ஆதரவளித்து உள்ளனர்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி ஜந்தர் மந்தர் பகுதிக்கு நேரில் சென்று மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதலையும் ஆதரவையும் தெரிவித்தார். அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த மல்யுத்த வீராங்கனையும் பாஜகவை சேர்ந்தவருமான பபிதா போகத், "பிரியங்கா காந்தி தனது செயலாளர் சந்தீப் சிங்குடன் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி வழங்க ஜந்தர் மந்தருக்கு சென்று இருக்கிறார். அவரோடு இருக்கும் சந்தீப் மீதும் பாலியல் புகார்கள் உள்ளன." என்று குறிப்பிட்டார்.
இதற்கு ட்விட்டரில் பதிலளித்து உள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனாடே, "வீதியில் உதவியின்றி நிற்கும் தங்கள் சகோதரிகளுக்கு ஆதரவளிக்காத பபிதா போகத் தலைவராக வேண்டும் என்ற கனவில் உள்ளார். பாஜகவினரால் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி அமைதி காத்து வருகிறார்கள். நீங்கள் இருவருமே இந்திய பெண்களின் மன்னிப்புக்கு தகுதியற்றவர்கள்." என்று பதிவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications