ராகுல் காந்தியின் ஜாதி குறித்த பேச்சு.. மோடிக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் தீர்மானம் நோட்டீஸ்!
டெல்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ஜாதி குறித்து பாஜக எம்பி அனுராக் தாக்கூர் பேசிய பேச்சை சமூக வலைதளங்களில் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளது. லோக்சபாவில் ராகுல் காந்திக்கு ஜாதி எது என தெரியாது என அனுராக் தாக்கூர் பேசியிருந்த வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
லோக்சபாவில் மத்திய பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பட்ஜெட் அல்வா தயாரிப்பில் கூட ஓபிசி பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கிறது. பட்ஜெட் தயாரிப்பிலும் அப்படித்தான். இதற்காகவே நாங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிறோம். இந்தியா கூட்டணி ஆட்சியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம் கொண்டுவருவோம் என்றார். இதற்குதான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு கைகளால் தலையில் அடித்துக் கொண்டார். இந்த படம்தான் சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.

இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்பியுமான அனுராக் தாக்கூர் நேற்று லோக்சபாவில் பேசுகையில், தன்னுடைய ஜாதியே எது என தெரியாதவர்கள் எல்லாம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கின்றனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இந்த லோக்சபாவிலேயே மிக கடுமையாகவே ஓபிசி-க்கான இடஒதுக்கீட்டை எதிர்த்திருந்தார் என பேசினார்.
இதற்கு லோக்சபாவிலேயே ராகுல் காந்தி பதிலடி கொடுத்தார். நீங்கள் என்னை இழிவுபடுத்தினாலும் நான் கவலைப்படமாட்டேன். இதே நாடாளுமன்றத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான சட்டம் கொண்டு வருவோம் என சூளுரைத்தார். ஆனால் அனுராக் தாக்கூரோ, நான் யாருடைய பெயரையுமே குறிப்பிடவில்லை என்றார்.
அனுராக் தாக்கூரின் ராகுல் காந்தி ஜாதி குறித்த பேச்சு பெரும் சர்ச்சையானது. இன்று லோக்சபா நடவடிக்கைகளை முடக்கி வைத்த எதிர்க்கட்சி எம்பிக்கள், அனுராக் தாக்கூர் இந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனிடையே அனுராக் தாக்கூரின் லோக்சபா பேச்சை பிரதமர் நரேந்திர மோடி தமது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். இதற்கு இந்தியா கூட்டணியின் கனிமொழி எம்பி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் லோக்சபாவில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்பி சரன்ஜித் சிங் சன்னி, உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமை மீறல் பேச்சை எல்லாம் பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் பகிருகிறார் எனவும் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications