நேஷனல் ஹெரால்டு வழக்கு.. இன்று விசாரணைக்கு ஆஜரான ராகுல் காந்தி! போராட்டத்தில் இறங்கிய காங்கிரஸ்
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை இன்று 4ஆவது நாளாக விசாரணை நடத்த உள்ளது.
நாட்டின் விடுதலை போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வந்த சமயத்தில் நேரு அசோசியேட்டடு ஜர்னல்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி இருந்தார்.
இது நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை வெளியிட்டு வந்தது. நஷ்டத்தில் இயங்கிய இந்த நிறுவனத்தின் பங்குகள் கடந்த 2010இல் யங் இந்தியா என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டன.

சம்மன்
இது சர்ச்சையானது. ஏனென்றால் யங் இந்தியா நிறுவனத்தின் 76% பங்குகள் சோனியா காந்தி, ராகுல் காந்தி வசம் இருந்ததே இதற்குக் காரணம். இது தொடர்பாகச் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில், அமலாக்கத் துறையும் அன்னிய செலாவணி வழக்கைத் தொடர்ந்தது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது.

விசாரணை
சோனியா காந்தி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் ராகுல் காந்தி மட்டும் கடந்த வாரம் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் மூன்று நாட்களாக விசாரணை நடத்தப்பட்டது. ஒரு நாள் இடைவெளி விட்டுமீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இருப்பினும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாயார் சோனியாவை சந்திக்கச் செல்வதால் ராகுல் காந்தி கூடுதல் அவகாசம் கோரி இருந்தார்.

ராகுல் காந்திக்கு சம்மன்
இதையடுத்து இன்று (ஜூன் 20) விசாரணைக்கு ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி இன்று 4-வது நாளாக விசாரணைக்கு ஆஜரானார். இருப்பினும், இதற்குக் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமலாக்கத் துறை எந்தவொரு விதிமுறைகளையும் பின்பற்றாமல் செயல்பட்டு வருவதாகச் சாடி வருகின்றனர்.

காங்கிரஸ்
இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரை பல முறை கேட்டும் அமலாக்கத் துறை வெளியிடவில்லை என்றும் அப்படி இருக்கும் போது ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் சம்மன் அனுப்பியது ஏன் எனக் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. இருப்பினும், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.

போராட்டம்
ராகுல் காந்தியிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இது காங்கிரஸ் கட்சியினருக்கு எழுச்சி அளிப்பதாக அமைந்துவிட்டது. இதனுடைய இந்த விவகாரம் தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர்கள் குழு இன்று குடியரசுத் தலைவரிடம் நேரில் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications