நாடாளுமன்ற நிலைக்குழுக்கள்.. காங்-க்கு திமுக கனிமொழி மூலம் பாஜக வேட்டு.. டெல்லியில் உள்குத்து அனல்
டெல்லி: நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் காங்கிரஸை அடியோடு ஓரம் கட்டிவிட்டு திமுகவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. இதனால் காங்கிரஸ் மேலிடம் பாஜக, திமுக மீது வெளிப்படுத்த முடியாத அதிருப்தியில் இருக்கிறது என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, எதிர்க்கட்சிகள்- எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஏதேனும் ஒரு குடைச்சலை கொடுப்பது வழக்கம் என்பது நீண்டகால குற்றச்சாட்டு. இப்போது 2024 லோக்சபா தேர்தலை மையமாக வைத்து அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக வரிந்து கட்டி வியூகம் வகுத்து கொண்டிருக்கின்றன.
பிஆர்எஸ் மேடையிலேயே ஓப்பனாக பேசிய திருமாவளவன்.. 'காங்கிரஸ் இல்லாத அணி அமைந்தால்..’ ஆடிப்போன கேசிஆர்!
தேர்தல் வியூகங்கள்
காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டு மாநில கட்சிகளை மட்டும் இணைத்து ஒரு கூட்டணியை உருவாக்கலாம்; காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைத்து ஒரு மெகா கூட்டணியை அமைக்கலாம் என்பது எல்லாம் விவாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கான முயற்சிகளில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆளுக்கு ஒரு திசையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
கேசிஆர் முயற்சி
இப்போது காங்கிரஸுக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடியாக களமிறங்கிவிட்டார். தமது டிஆர்எஸ் கட்சியையே பிஆர்எஸ் என மாற்றிய கையோடு தென்னிந்திய மாநில கட்சிகளை அணிசேர்க்கவும் தொடங்கிவிட்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி, திமுகவும் பிஆர்எஸ் கூட்டணியில் இணையும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
திமுகவுக்கு முக்கியத்துவம் தந்த பாஜக
இந்நிலையில் மத்திய பாஜக அரசு, நாடாளுமன்ற நிலைக்குழுக்களை அதிரடியாக மாற்றி அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ் வசம் இருந்த பல நிலைக்குழுக்கள் பறிக்கப்பட்டுவிட்டன. இந்த நிலைக்குழு தலைவர் பதவிகள் பாஜக மற்றும் திமுக வசம் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக எம்பி திருச்சி சிவாவுக்கு, தொழில்துறை நிலைக்குழு தலைவர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. கனிமொழி வசம் ஏற்கனவே உரங்கள் நிலைக்குழு இருந்தது. தற்போது அதனை மாற்றி, கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவராக கனிமொழியை நியமித்துள்ளது. இது மிகவும் முக்கியமான பதவியாக பார்க்கப்படுகிறது. 31 எம்.பி.க்களைக் கொண்ட நிலைக் குழுவின் தலைவராக்கப்பட்டுள்ளார் கனிமொழி.
நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று கிராமப்புறங்களின் நிலைமை, மேம்பாடு உள்ளிட்டவை ஆய்வு செய்யும் அதிகாரம் கொன்டது இக்குழு. இந்த நியமனம்தான் இப்போது டெல்லி அரசியலில் ஹாட் டாபிக்காக இருக்கிறது.
காங்கிரஸ்- திமுக கூட்டணிக்கு வேட்டு?
அதாவது நிலைக்குழுக்களில் இருந்து காங்கிரஸை கழற்றிவிட்டு பாஜகவுக்கு கொடுத்திருந்தால்தான் கூட புகைச்சலைத் தந்திருக்காது. ஆனால் எதிர்க்கட்சியான திமுகவுக்கு பாஜக தூண்டில் போடுவது போல அதிகாரம் மிக்க நிலைக்குழு பதவி தருவது என்பது ஏன் என்பதுதான் காங்கிரஸின் கேள்வி. திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு ஒருபக்கம் கேசிஆர், குமாரசாமி வேட்டு வைக்கும் வகையில் பேசி வருகின்றனர். இந்தப் பக்கம் பாஜகவும் தம் பங்குக்கு திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு ஆப்பு வைத்து வருகிறது. அப்படியானால் விரைவில் காங்கிரஸிடம் இருந்து திமுக விலகுமா? என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கேள்வி.