நமது அரசியல் சாசனம் மேலும் வலிமையாகிவிட்டது.. அம்பேத்கர் மகிழ்வார்.. நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு
டெல்லி: இந்தியாவும், அரசியலமைப்பும் வலிமையாகியிருப்பதால், அம்பேத்கர் மகிழ்ச்சியடைந்திருப்பார் என்று, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
70வது அரசியல் சாசன தினம் இன்று. எனவே நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த உரையை, எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. மகாராஷ்டிராவில், குதிரை பேரத்தை பாஜக நடத்துவதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும், மோடி உரையை புறக்கணித்தன.
நாடாளுமன்ற வளாகத்திலுள்ள அம்பேத்கர் சிலை எதிரே அவர்கள் போராட்டங்களை நடத்தினர். அரசியல் சாசன உரையை, சோனியா காந்தி, அங்கு நின்றபடி வாசித்தார். அதேநேரத்தில், பிரதமர் மோடி நாடாளுமன்றம் உள்ளே தனது உரையை நிகழ்த்தினார்.
மோடி பேசியதாவது: நமது அரசியலமைப்பு இரண்டு மந்திரங்களை கொண்டது. 'இந்தியருக்கு கண்ணியம்' மற்றும் 'இந்தியாவுக்கு ஒற்றுமை' என்பதே அந்த தாரக மந்திரம்.
நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு.. பாஜகவின் கேம் ஓவர்.. சோனியா.. நவாப் மாலிக் வரவேற்பு
இந்திய அரசியலமைப்பு, குடிமக்களின் உரிமைகளோடு, அவர்களின் கடமைகளையும் வரையறுத்து காட்டுகிறது. இது நமது அரசியலமைப்பின் சிறப்பு அம்சமாகும். நாம் நமது உரிமைகளைப் பற்றி மட்டுமே நினைக்கிறோம், ஆனால் இப்போது நாம் கடமைகளில் கவனம் செலுத்த வேண்டிய நேரம். நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பதைப் பற்றி இனி சிந்திக்கலாம்.
நமது அரசியலமைப்பு உலகில் மிகவும் மதச்சார்பற்றது, அரசியலமைப்பை எப்போதும் ஒரு புனித நூலாகக் கருதும் நாட்டு மக்களுக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். இந்தியாவும் அதன் அரசியலமைப்பும் முன்பைவிட பலமடைந்து, பலமடைந்து வலிமையான நிலைக்குச் சென்றுவிட்டதைக் கண்டு, பாபா சாஹேப் அம்பேத்கர் இன்று இருந்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பார்.
இந்தியா அரசியலமைப்பு தினத்தை கொண்டாடும் அதேநேரம், நவம்பர் 26 மோசமான ஒரு சம்பவத்தாலும் நினைவுகூறப்படுகிறது. 2008 இல் இந்த நாளில் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல்களையும், நமக்கு இந்த நாள், நினைவூட்டுகிறது. மும்பை பயங்கரவாத தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். இவ்வாறு மோடி பேசினார்.