தாய்மொழியுடன் இந்தியையும் பயன்படுத்தனும்.. அமித்ஷா ட்வீட்! உடனே பதிலடி கொடுத்த டாக்டர் ராமதாஸ்!
டெல்லி/சென்னை: இந்தியர்கள் அனைவரும் தாய்மொழியுடன் இந்தியையும் பயன்படுத்த வேண்டும் என்று இந்தி மொழி தின நாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார். அமித்ஷாவின் இந்த கருத்து இந்தியை மறைமுகமாகத் திணிக்கும் செயல் என்று பாஜகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்தி மொழி தினம் இன்று மத்திய அரசால் கடைபிடிக்கப்படுகிறது. இந்தி மொழி தினத்துக்கு எதிராக இந்தி பேசாத மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
கர்நாடகாவில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்னதாக இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் கன்னட அமைப்புகள் இன்று நடத்தின. சமூக வலைதளங்களிலும் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கானது.
கர்நாடகாவில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டம் - சமூக வலைதளங்களிலும் #StopHindiImposition டிரெண்டிங்
மோடி வாழ்த்து
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் இந்தி தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், இந்தி மொழியை வளமாக்க பல்வேறு தரப்பினர் பங்களிப்பு செய்தனர். இத்தகைய பங்களிப்புகளால் இந்தியை மொழி வலிமை அடைகிறது. உலக அரங்கத்தில் அழுத்தமான அடையாளத்தையும் தருகிறது என கூறியுள்ளார். இதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமித்ஷா வாழ்த்தால் சர்ச்சை
அமித்ஷா தமது ட்விட்டர் பக்கத்தில், இந்தியர்கள் தாய்மொழியுடன் அன்றாடம் இந்தி மொழியையும் பயன்படுத்த வேண்டும். இந்தியாவின் முன்னேற்றம் தாய்மொழி, அலுவல் மொழியான இந்தியின் முன்னேற்றத்தில் இருக்கிறது என பதிவிட்டிருக்கிறார். அமித்ஷாவின் இந்த ட்விட்டர் பதிவு கடும் சர்ச்சையாகவும் வெடித்திருக்கிறது. இந்தியை திணிக்கும் வகையில் அமித்ஷா பதிவிட்டிருப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
டாக்டர் ராமதாஸ் பதிலடி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில், இந்தியர்கள் அனைவரும் அலுவல் மொழியான இந்தியுடன் தாய்மொழியையும் இணைத்து பயன்படுத்துவதில் தான் நாட்டின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். இது மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் செயலாகும்! இந்தி திவாஸ் நாளில் இந்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது தவறில்லை. ஆனால், இந்தியைப் பயன்படுத்தினால் தான் நாடு முன்னேறும் என்று கூறுவதில் ஏராளமான பொருள்கள் மறைந்து கிடக்கின்றன. அது தவறு... அவ்வாறு கூறக்கூடாது!
தேவை மொழி சமநிலை
தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கிறது. அந்தக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி மொழிச்சமநிலையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.