ஹிட்லரின் கடைசி கால நிலைதான் பிரதமர் மோடிக்கு ஏற்படும்.. காங்கிரஸ் மூத்த தலைவர் பேச்சால் சர்ச்சை
டெல்லி: ஹிட்லரின் பாதையை பின்பற்றினால் ஹிட்லருக்கு எப்படி மரணம் நேர்ந்ததோ அப்படித்தான் பிரதமர் மோடிக்கு நேரும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் சுபோத்காந்த் சஹாய் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராகவும் ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தவும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் இன்று சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

இதில் சுபோத்காந்த் சஹாய் பேசியதாவது: காங்கிரஸ் கட்சி தியாகிகளால்தான் இந்த தேசம் உருவானது; இந்த நாட்டுக்காக எண்ணற்ற காங்கிரஸ் தியாகிகள் உயிரைக் கொடுத்துள்ளனர். ஆனால் நாங்கள் வரம்பு மீறியது இல்லை. சோனியா காந்தியை அவமதித்தால் எந்த ஒரு காங்கிரஸ் தொண்டனும் பொறுமையாக இருக்கமாட்டான்.
பிரதமர் மோடி ஹிட்லரின் பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். ஹிட்லரின் பாதையில் பிரதமர் மோடி சென்றால் நிச்சயமாக ஹிட்லருக்கு எப்படி மரணம் நேர்ந்ததோ அப்படித்தான் நேரும். இவ்வாறு சுப்ப்த்காந்த் சஹாய் பேசினார். அவரது இந்த பேச்சின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. சுபோத்காந்த் சஹாயின் இப்பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பூனவல்லா கூறுகையில், பிரதமர் மோடி மீதான இத்தகைய விமர்சனம் கடும் கண்டனத்துக்குரியது; ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் இத்தகைய பேச்சுகளை ஊக்கப்படுத்துகின்றனர். சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஏற்கனவே மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஷேக் ஹூசைன், பிரதமர் மோடி நாயை போல அடிபட்டு சாவார் என பேசியது பெரும் பஞ்சாயத்தானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications