கார்பேவேக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்த மத்திய அரசு அனுமதி
டெல்லி: கார்பேவேக்ஸ் கொரோனா தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை போடும் திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்தது.
இந்த மாதம் கொரோனா 4ஆவது அலை இந்தியாவில் பரவக் கூடும் என கான்பூர் ஐஐடி ஆய்வுகள் கணித்துள்ளது. அதற்கேற்ப தென்னிந்தியாவில் கொரோனா கேஸ்களின எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

12 முதல 14 வயது
இதனால் தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. 12 முதல் 14 வயதுக்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் கடந்த மார்ச் 16 ஆம் தேதி தொடங்கப்பட்டது. 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கான கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்கியது.

18 வயதுக்கு மேற்பட்டோர்
நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 193,96,47,071 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக கார்பேவேக்ஸ் என்ற தடுப்பூசியை போடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அனுமதி
ஹைதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல் இ நிறுவனம் இந்த கார்பேவேக்ஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக செலுத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் பயாலஜிக்கல் இ நிறுவனத்தினர் விண்ணப்பித்திருந்தனர்.

பூஸ்டர் டோஸ்
இந்த தடுப்பூசியின் பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்ததும் இந்த தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக செலுத்துவதற்கு நேற்று அனுமதி அளித்தது. கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியின் இரு தவணைகளை செலுத்தி 6 மாதங்கள் ஆனவர்கள் இந்த கார்பேவேக்ஸ் தடுப்பூசி பூஸ்டரை போட்டுக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications