'ஆகஸ்ட் இறுதியில் கொரோனா 3ஆம் அலை.. இந்த 4 காரணங்களால் ஏற்படும்..' அடித்து சொல்லும் ஐசிஎம்ஆர்
டெல்லி: இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா 3ஆம் அலை ஏற்படலாம் என எச்சரித்துள்ள ஐசிஎம்ஆரின் தொற்று நோய் பிரிவு தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா, ஆனால் அது 2ஆம் அலை அளவுக்கு மோசமாக இருக்காது என்றும் குறிப்பிட்டார்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் மிக மோசமாக இருந்தது. நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பத் தொடங்கின.
தற்போதுதான் வைரஸ் பாதிப்பு மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில வாரங்களாக வைரஸ் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழாகவே இருந்து வந்துள்ளது.
கொரோனா 3ஆம் அலை
இருப்பினும், கொரோனா 2ஆம் அலை இன்னும் முழுவதுமாக முடியவில்லை என்றும் மாநிலங்கள் தளர்வுகளை அறிவிக்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா 3ஆம் அலை தொடர்பான தகவல்களும் இணையத்தில் அதிகம் வெளிவரத் தொடங்கிவிட்டன. மக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிக்கவில்லை என்றால் விரைவில் 3ஆம் அலை ஏற்படத் தொடங்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதம்
இந்நிலையில், கொரோனா 3ஆம் அலை குறித்து ஐசிஎம்ஆர்-இன் தொற்று நோய் பிரிவு தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா கூறுகையில், "இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா 3ஆம் அலை ஏற்பட வாய்ப்புள்ளது. 3ஆம் அலையால் நாடு முழுவதும் ஏற்படலாம். ஆனால், அதேநேரம் இது 2ஆம் அலை அளவுக்கு மோசமாக இருக்காது.
4 காரணங்கள்
இந்த நான்கு காரணங்களால் கொரோனா 3ஆம் அலை ஏற்படலாம். பொதுவாக கொரோனவில் இருந்து குணமடைந்தவர்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தி உருவாகும். அது காலப்போக்கில் குறைந்து 3ஆம் அலை ஏற்படலாம். அல்லது புதிய வகை கொரோனா தோன்றி, அது இந்த நோயெதிர்ப்பு சக்திக்குப் பலன் அளிக்காமல் போகலாம்.
உருமாறிய கொரோனா
மூன்றாவதாக வேகமாகப் பரவும் ஒரு உருமாறிய கொரோனா தோன்றலாம். அல்லது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விரைவாக நீக்குவதன் மூலம் கொரோனா 3ஆம் அலை ஏற்படலாம். இந்தியாவில் அடுத்த கொரோனா அலை ஏற்பட இவை தான் முக்கிய காரணங்களாக இருக்கும்.
Recommended Video
Array
டெல்டா மற்றும் டெல்டா கொரோனா ஏற்கனவே நாட்டில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டன. எனவே, இதற்கு மேல் அவை மோசமான பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்றே நான் கருதுகிறேன்" என்று அவர் தெரிவித்தார். நாட்டின் சில பகுதிகளில் பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடத் தொடங்கிவிட்டதாகவும் நிலைமை இப்படியே தொடர்ந்தால் கொரோனா அடுத்த அலையைத் தடுக்க முடியாது என்றும் ஐசிஎம்ஆர் கடந்த வாரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார அமைப்பு
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. இந்த வகை கொரோனா இதுவரை மொத்தம் 111 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. உலகின் சில பகுதிகளில் கொரோனா 3ஆம் அலைக்கான அறிகுறிகள் தொடங்கிவிட்டதாக உலக சுகாதார அமைப்பும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.