முடி சூட்டும் விழா முடிந்தது.. மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியது.. ராகுல் காந்தி அட்டாக்!
டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் கடந்த ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் மல்யுத்த வீராங்கனைகள் இன்று புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதனால், அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து சென்றனர்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராகவும் இருக்கும் இவர், இந்திய மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஜனவரி மாதமே இந்த குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

விசாரணைக்குழு அமைக்கப்பட்ட பின்னரும் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய மல்யுத்த வீரர் வீராங்கனைகள் இந்த மாத தொடக்கத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் போரட்டத்தில் ஈடுபட்டனர். மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரிஜ் பூஷன் மீது புகார் அளித்த பிறகும் கூட வழக்குப்பதிவு செய்யவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னரே பிரிஜ் பூஷன் மீது போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அதன்பிறகு வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வீரர் வீராங்கனைகளின் குற்றச்சாட்டாக உள்ளது. தொடர்ந்து போராட்டம் நீடித்து வரும் நிலையில், இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவதால் அங்கு போராட்டம் நடத்த இருப்பதாக மல்யுத்த வீராங்கனைகள் கூறினர்.
இதனால், டெல்லி எல்லைகளை மூடிய போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தினர். இந்த கெடுபிடிகளையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்தனர். வலுகக்கட்டாயமாக போலீசார் கைது செய்ததால் அங்கு தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. ஜந்தர் மந்தர் மைதானத்தில் இருந்து மல்யுத்த வீரர் வீராங்கனைகள் வலுக்கட்டாயமாகப் பேருந்தில் ஏற்றப்பட்டு அழைத்து செல்லப்ட்டனர்.
இதுதொடர்பான வீடியோவும் வெளியானது. குறிப்பாக இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்கை போலீசார் சுற்றி வளைத்து இழுத்துச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.30 வயதான சாக்ஷி மாலிக்கை பெண் போலீசார் இழுத்துச் செல்வதும் பஜ்ரங் புனியா அவரை காப்பாற்ற முயல்வதும் போன்ற வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. நெட்டிசன்களும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், மல்யுத்த வீரர் வீராங்கனைகள் கைதுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டரில், வீரர் வீராங்கனைகள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்படும் வீடியோவையும் பதிவிட்டு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி கூறுகையில், "முடி சூடும் விழா முடிந்தததும் மக்களின் குரல்களை நசுக்கும் பணி தொடங்கியுள்ளது" கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications