இந்தியாவில் படுஉக்கிரமாக தாக்கும் கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 396 ஆக அதிகரிப்பு
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதுவரை மொத்தம் 396பேர் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் மார்ச் முதல் வாரத்தை ஒப்பிடுகையில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமையன்று ஒரே நாளில் கொரோனாவால் 57 பேர் பாதிக்கப்பட்டனர்.
சனிக்கிழமையன்று இந்த எண்ணிக்கை 78 ஆக உயர்ந்தது. இன்று ஒரே நாளில் 81 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று 396 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் கேரளாவில் 12 பேரும் மகாராஷ்டிராவில் 11 பேரும் பஞ்சாபில் 10 பேரும் கொரோனாவால் புதியதாக பாதிக்கப்பட்டவர்கள். இன்று மகாராஷ்டிராவில் மேலும் 10 பேருக்கும் தமிழகத்தில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மட்டும் 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 40% அளவுக்கு கொரோனாவின் தாக்கம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.