மகா., கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது கவலை தருகிறது: 6 மாநில முதல்வர்கள் கூட்டத்தில் மோடி
டெல்லி: மகாராஷ்டிரா, கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பது கவலை தருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, ஒடிஷா மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் கொரோனா பாதிப்பு குறித்து மாநிலங்களின் முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த வீடியோ கான்பரன்ஸில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மூன்றாவது அலை பற்றிய அச்சுறுத்தல்கள் அனைவர் மத்தியிலும் தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. பாதிப்பு குறைந்து வருவதாக நேர்மறையான சமிக்ஞைகளை நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒரு சில மாநிலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

6 மாநிலங்களில் பாதிப்பு அதிகம்
கடந்த வாரத்தில் 80% பாதிப்புகளும், 84% உயிரிழப்புகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாநிலங்களில் பதிவாகியிருக்கிறது. இரண்டாவது அலை தொடங்கிய மாநிலங்களில் இயல்பு நிலை முதலில் திரும்பும் என்று முன்னதாக நிபுணர்கள் கருதினார்கள். எனினும் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகுந்த கவலைக்குரிய விஷயம்.

3-வது அலையை தடுத்தல்
இதேபோன்ற நிலை இரண்டாவது அலை உருவாவதற்கு முன்பு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் காணப்பட்டது. அதனால்தான், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் மாநிலங்களில் மூன்றாவது அலை உருவாவதை தடுப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நீண்ட காலத்திற்கு பாதிப்பு அதிகரித்தால், கொரோனா தொற்றின் உருமாறும் தன்மை அதிகரிப்பதற்கும், புதிய மாறுபாடுகள் உருவாகும் அபாயமும் ஏற்படக்கூடும்.

என்ன செய்ய வேண்டும்?
எனவே பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகிய உத்திகளை தொடர்ந்து பின்பற்றுவதோடு, மிகச்சிறிய கட்டுப்பாட்டு மண்டலங்களிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதிக பாதிப்புகள் ஏற்படும் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். மாநிலம் முழுவதும் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் திரு மோடி வலியுறுத்தினார். பாதிப்பு அதிகரிக்கும் பகுதிகளில் தடுப்பூசியை ஓர் உத்தியாக பயன்படுத்த வேண்டும்.

ரூ. 23,000 கோடி நிதி ஒதுக்கீடு
அவசர சிகிச்சைப்பிரிவில் படுக்கைகள் மற்றும் பரிசோதனையின் திறன் உள்ளிட்ட மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அவசரகால கொவிட் எதிர்வினை தொகுப்பிற்காக ரூ. 23,000 கோடி வழங்க அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக மாநிலங்கள் இந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும்.

கிராமங்களுக்கு முன்னுரிமை
உள்கட்டமைப்பு வசதிகளில், குறிப்பாக ஊரகப் பகுதிகளில் உள்ள இடைவெளியை, நிரப்ப வேண்டும். பல்வேறு வளங்கள் மற்றும் தரவுகளை பொதுமக்கள் எளிதாக, வெளிப்படைத்தன்மை வாயிலாக அணுகுவதற்கும், இது போன்ற சிக்கல்களில் இருந்து நோயாளிகள் விடுபடுவதற்காகவும், தகவல் தொழில்நுட்ப அமைப்புமுறைகள், கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் உதவி மையங்களை வலுப்படுத்த வேண்டும். மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 332 அழுத்த விசை தொழில்நுட்பத்தில் இயங்கும் ஆலைகளுள் 53 ஆலைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

உலக நாடுகளில் அதிகரிப்பு
குழந்தைகளை பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்காக அனைத்து வகையான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஐரோப்பா, அமெரிக்கா, வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் பல்வேறு நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவது கவலை அளிக்கிறது. இது இந்தியாவிற்கும், உலகிற்குமான எச்சரிக்கை. கொரோனா இன்னும் நீங்காத போதும், தளர்வுகளுக்குப் பிந்தைய பழக்கவழக்கங்களின் காட்சிகள் கவலை அளிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள பெரும்பாலான மாநிலங்களில் அதிக மக்கள் தொகையுடன் கூடிய பெருநகரங்கள் அமைந்துள்ளதால், நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, கூட்ட நெரிசலைத் தவிர்க்க வேண்டும். மக்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வை உருவாக்க அரசியல் கட்சிகள், சமூக நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் முன்வர வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications