30 நொடியில் கண்டுபிடிக்கலாம்.. இந்தியாவிற்கு ஹைடெக் வல்லுநர்களை அனுப்பும் இஸ்ரேல்.. நெதன்யாகு அதிரடி
இந்தியாவில் வெறும் 30 நொடியில் கொரோனா பாதிப்பை கண்டறியும் வகையில் டெஸ்டிங் கருவிகளை உருவாக்க உள்ளனர்.
டெல்லி: இந்தியாவில் வெறும் 30 நொடியில் கொரோனா பாதிப்பை கண்டறியும் வகையில் டெஸ்டிங் கருவிகளை உருவாக்க உள்ளனர். இதற்காக இஸ்ரேல் வல்லுநர்கள் இந்தியா வர இருக்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1290375 ஆக உயர்ந்துள்ளது. தினசரி கேஸ்கள் 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இன்னும் இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா சோதனைகள் போதுமான அளவில் செய்யப்படவில்லை.
தமிழகத்தில் மட்டுமே 21 லட்சம் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் பெரிய அளவில் கொரோனா சோதனைகள் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் உதவி
இந்த நிலையில் தற்போது இந்தியாவிற்கு உதவியாக இஸ்ரேல் களமிறங்கி உள்ளது. அதன்படி இந்தியாவில் நவீன கொரோனா சோதனை கருவிகளை உருவாக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இந்தியா மற்றும் இஸ்ரேல் விஞ்ஞானிகள் உதவியுடன் அதிவேக கொரோனா சோதனை கருவிகளை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளனர். வெறும் 30 நொடியில் கொரோனா முடிவுகளை கண்டுபிடிக்கும் கருவியை உருவாக்க உள்ளனர்.
டெஸ்டிங் சோதனை
அதாவது ரத்த மாதிரி மூலம் கொரோனாவை கண்டுபிடிக்கும் சோதனை ஆகும் இது. இந்த கருவியில் ரத்த மாதிரிகளை கொடுத்தால் 30 நொடியில் கண்டுபிடிக்க முடியும். மிக துல்லியமாக இது முடிவை கண்டுபிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவலை எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் இந்த கருவியை உருவாக்க உள்ளனர்.
அதிவேகம்
இதற்காக இஸ்ரேல் தனது சர்வதேச ஹைடெக் வல்லுநர்கள் குழு ஒன்றை இந்தியா அனுப்புகிறது. இந்தியாவில் இருக்கும் மருத்துவர் குழுவுடன் இணைந்து இவர்கள் ஆலோசனைகளை செய்வார்கள். அதேபோல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள்.கொரோனா வைரஸ் தொடர்பான முக்கியமான ஆராய்ச்சிகளை இவர்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வென்டிலேட்டர்கள் உதவி
அதேபோல் இந்தியாவிற்கு இவர்கள் வென்டிலேட்டர்கள், பாதுகாப்பு சாதனங்கள் ஆராய்ச்சி கருவிகளை அனுப்ப உள்ளனர். இந்தியாவுடன் இருக்கும் நெருக்கமான நட்பு காரணமாக இந்த உதவிகளை செய்வதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியும், அதிபர் நெதன்யாகுவும் மிகவும் நெருக்கமான நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மோசம்
முன்னதாக சீனா மற்றும் தென் கொரியாவிடம் இருந்து இந்தியா ராபிட் டெஸ்ட் கிட்களை வாங்கியது. ஆனால் இந்த கிட்கள் சரியாக வேலை செய்யவில்லை. உடனே பழுதானது. இதற்கு பதிலாக தற்போது இந்தியாவே ரேபிட் கிட்களை உருவாக்க உள்ளது. இஸ்ரேல் திடீரென இந்தியாவுடன் கைகோர்த்து இருப்பதும், இந்தியர்களுக்கு வல்லுநர்களை அனுப்புவதும் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.