கொரோனா- நாடாளுமன்ற கூட்டத் தொடரை இன்றுடன் நிறைவு செய்ய மத்திய அரசு முடிவு?
டெல்லி: கொரோனா தாக்கத்தால் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரை இன்றுடன் மத்திய அரசு முடித்துக் கொள்ளக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிதீவிரமாக உள்ளது. இதனையடுத்து நாட்டின் பல மாநிலங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

பல மாநிலங்களின் எல்லைகள் மூடி சீல் வைக்கப்பட்டிருக்கின்றன. நாட்டின் ரயில்கள் அனைத்தும் வரும் 31-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்தும் பல மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை நிறைவு செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசு தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்தி வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தொடருகிறது. ஆனாலும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
இதனையடுத்து தங்களது கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு செல்ல மாட்டார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் அறிவித்துள்ளன. தொகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பதால் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் பங்கேற்கமாட்டார்கள் என இக்கட்சிகள் அறிவித்துள்ளன.
இதனால் நாடாளுமன்ற கூட்டத்தை நிறைவு செய்வது தொடர்பாக மத்திய அரசு டெல்லியில் இன்று ஆலோசனை நடத்த உள்ளது. இந்த ஆலோசனைக்குப் பின்னர் நாடாளுமன்ற கூட்டம் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடலாம் என்கின்றன டெல்லி தகவல்கள். இதற்கான அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications