கொரோனா பரவல் எதிரொலி: மே.வங்க சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களை ரத்து செய்தார் ராகுல்!
டெல்லி: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மேற்கு வங்க சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களை ரத்து செய்வதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். மேலும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பிரசார கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சவேகத்தில் பரவி வருகிறது. நாள்தோறும் கொரோனா பாதிப்பு என்பது 2.6 லட்சத்தை தாண்டியதாக இருக்கிறது. கொரோனா மரணங்களும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

தடுப்பூசி பற்றாக்குறை
கொரோனா தடுப்பூசிகளும் முனைப்பாக நாடு முழுவதும் போடப்பட்டு வருகின்றன. இருப்பினும் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என்கிற புகார்களும் எழுந்துள்ளது.

கூட்டங்கள் ரத்து
இதனிடையே கொரோனா பரவல் எதிரொலியால் மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தல் பிரசார கூட்டஙகளை ரத்து செய்வதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் மொத்தம் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 5 கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது.

பாஜக மீது மமதா புகார்
இந்த தேர்தல் பிரசாரத்தின் போது, பிற மாநிலங்களில் இருந்து தொண்டர்களை அழைத்து வந்து மேற்கு வங்கத்தில் கொரோனாவை பாஜக பரப்பி வருகிறது என்று மாநில முதல்வர் மமதா பானர்ஜி கூறியிருந்தார். ஆனால் மமதா பானர்ஜியின் குற்றச்சாட்டை பாஜக நிராகரித்திருந்தது. தற்போதைய நிலையில் மேற்கு வங்கத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

ராகுல் வேண்டுகோள்
இதனையடுத்து தமது தேர்தல் பிரசார கூட்டங்களை ரத்து செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். அத்துடன் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் மேற்கு வங்க தேர்தல் பிரசார கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications