கொரோனா: ராஜஸ்தானில் ஜன் ஆக்ரோஷ் யாத்திரையை ரத்து செய்தது பாஜக.. காங். பதிலடியால் திடீர் முடிவு!
டெல்லி: கொரோனா பரவலைக் காரணம் காட்டி ராஜஸ்தானில் ஜன் ஆக்ரோஷ் யாத்திரையை ரத்து செய்வதாக பாஜக அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாதயாத்திரையை ரத்து செய்ய மத்திய அரசு நெருக்கடி கொடுத்தது. இதற்கு பதிலடியாக, கர்நாடகாவிலும் ராஜஸ்தானிலும் பாஜக நடத்தும் யாத்திரைகளை ஏன் ரத்து செய்யவில்லை என காங்கிரஸ் கேள்வி எழுப்பி இருந்தது.
சீனாவில் உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. சீனாவில் திரிபு கொரோனா வைரஸால் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. சீனாவின் மயானங்கள் நிரம்பி வழிகின்றன என சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. சீனாவை தொடர்ந்து ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

இதனால் உலகின் பல நாடுகளிலும் கொரோனா கால கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசும் நேற்றும் இன்றும் இடைவிடாமல் ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இன்று பிரதமர் மோடி டெல்லியில் கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். முன்னதாக மாநில அரசுகளுக்கும் இது தொடர்பாக மத்திய அரசு கடிதம் அனுப்பி இருந்தது.
தற்போது பெரும்பாலான மாநில அரசுகளின் முதல்வர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்திருக்கிறார். இந்த நிலையில்தான் பாஜக தலைமையான ராஜஸ்தானில் நடத்தப்பட்டு வந்த ஜன் ஆக்ரோஷ் யாத்திரையை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது. பாஜக மூத்த தலைவர் சதிஷ் புனியா இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளார். இதில் பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா பங்கேற்பதாக இருந்தது.
முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை சென்று கொண்டிருக்கும் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், உங்களது பாதயாத்திரையில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளான முக கவசம் அணிதல் உள்ளிட்டவைகளை பின்பற்ற வேண்டும்; அப்படி செய்ய முடியாது போனால் பாதயாத்திரையை ரத்து செய்யுங்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கர்நாடகாவிலும் ராஜஸ்தானிலும் பாஜக நடத்தும் யாத்திரைகளை நிறுத்த சொல்லாமல் ராகுல் யாத்திரையை குறிவைப்பது ஏன்? எந்தப் பகுதியிலும் கரோனா கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படவில்லை. எந்த ஒரு பொதுக்கூட்டத்திற்கும் இதுவரை கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. ராகுல் யாத்திரையை மட்டும் மத்திய அரசு குறிவைப்பது ஏன் என்பதும் காங்கிரஸின் கேள்வியாக இருந்தது. இதையடுத்து இப்போது பாஜக தாமக முன்வந்து யாத்திரையை ஒத்திவைத்துள்ளது.
அதேநேரத்தில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து விமான சேவைகளையும் நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி மணிஷ் திவாரி வலியுறுத்தி இருந்தார். மேலும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. சீனாவில் நடந்து கொண்டிருப்பதை நாம் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆகையால்தான் சீனாவுக்கான விமான சேவையை மத்திய பாஜக அரசு நிறுத்த வேண்டும் என மணிஷ் திவாரி கூறியிருந்தார். ஆனால் மத்திய அரசோ சீனாவுக்கு நேரடியான விமான சேவைகள் இல்லை. ஆகையால் நாம் அச்சப்பட வேண்டாம் என்கிறது.












Click it and Unblock the Notifications