சீனாவில் விஸ்வரூபம்.. இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ்.. மீண்டும் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்!
டெல்லி: சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிவிட்டதால் இந்தியாவில் கொரோனா கால கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக நாடுகளிடம் இருந்து சற்று விலகி இருந்த கொரோனா வைரஸ் மீண்டும் மிக வீரியமாக பரவ தொடங்கிவிட்டது. கொரோனா வைரஸ் உருவானதாக குற்றம்சாட்டப்படும் சீனாவில்தான் இப்போது அதிவேகமாக பாதிப்பு இருந்து வருகிறது. சீனாவில் கொரோனா மரணங்கள் முன்னெப்போதையும் விட மிக அதிகமாக உள்ளன என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.
இதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முதல் கட்டமாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்திருக்கிறது. கொரோனா தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, துறைசார் வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பு தொடர்பாக அச்சப்பட தேவை இல்லை; எந்த ஒரு சூழ்நிலையையும் நாம் எதிர்கொள்ள முடியும். நிச்சயம் நாம் எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
டெல்லி ஆலோசனைக் கூட்டத்தில் உலக அளவில் நிலவி வரும் கொவிட் 19 சூழ்நிலை மற்றும் உள்நாட்டு நிலைமைக் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார். சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைச் சுட்டிக் காட்டிய மத்திய சுகாதார அமைச்சர்,கொவிட் 19-ன் புதிய உருமாற்றத்தால் எதிர்வரும் பண்டிகையையும் கருத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். கொவிட் 19 பரவல் இன்னும் முழுமையாகக் குறையவில்லை என்றும் எனவே கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார். கொவிட் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், கொவிட் 19 தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களை டாக்டர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய பிஎப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவில் இருந்து குஜராத் திரும்பிய 61 வயது மூதாட்டியிடம் பிஎப்7 உருமாறிய வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. இதேபோல் ஒடிஷாவிலும் ஒருவருக்கு பிஎப் 7 திரிபு வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக, விமானங்களில் பயணம் செய்வோர் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு, அதிகாரிகளிடம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. ஏற்கனவே ராஜஸ்தான், ஹரியானா, இமாச்சல பிரதேச மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாதயாத்திரையை நிறுத்தவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
தற்போது விமான பயணிகளுக்கு முதல் கட்டமாக கட்டுப்பாடு, பின்னர் விமான சேவைகளில் கட்டுப்பாடு, பொது இடங்களில் ஒன்று கூடுதல் தொடர்பான கட்டுப்பாடுகள் என அடுத்தடுத்த அறிவுறுத்தல்களை மத்திய அரசு அறிவிக்கக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.












Click it and Unblock the Notifications