இந்தியாவில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி.. ஜிடிபி-இல் 1% குறைவாகவே செலவாகும்... புதிய ஆய்வில் தகவல்
டெல்லி: இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபி-இல் 1%க்கும் குறைவாகவே செலவாகும் என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசு மையங்களில் இலவசமாகத் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. மேலும், வரும் மே 1ஆம் தேதி 18 முதல் வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு அனுமதித்துள்ளது.
இருப்பினும், மத்திய, மாநில அரசுகளுக்கு வேறு வேறு விலைகளில் தடுப்பூசிகளை விற்பனை செய்வது தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில், மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் நாட்டிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 84 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த ரூ. 67.19 ஆயிரம் கோடி மட்டுமே செலவாகும் என இந்திய ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக மத்திய அரசு ரூ. 20 ஆயிரம் செலவிட வேண்டியிருக்கும். அதேபோல அனைத்து மாநில அரசுகளும் சேர்ந்து ரூ. 46 ஆயிரம் கோடி செலவிட வேண்டியிருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி - விலை, பதிவு செய்யும் முறை, பக்கவிளைவுகள்.. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
இந்தத் தொகை பார்க்கப் பெரிதாகத் தோன்றினாலும் இது நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபியில் வெறும் 0.36% மட்டுமே என இந்திய ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது மத்திய அரசின் பட்ஜெட்டில் இது ஒட்டுமொத்த ஜிடிபி-இல் 0.12ஆகவும், மாநில அரசின் பட்ஜெட்டில் இது ஒட்டுமொத்த ஜிடிபி-இல் 0.264ஆகவும் இருக்கும் என இந்தியா ரேட்டிங் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாகப் பீகார் தனது மொத்த மாநில ஜி.எஸ்.டி.பி-இல் 0.60 சதவீதத்தையும் , உத்தரப்பிரதேசம் 0.47 சதவீதம், ஜார்க்கண்ட் 0.37 சதவீதம் செலவிட வேண்டியிருக்கும். மேலும், ஒட்டுமொத்தமாக இந்தியா இப்போது எதிர்கொள்ளும் உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார பிரச்சனையுடன் ஒப்பிடுகையில் இது குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.