ஓணம் பண்டிகை.. அலட்சியத்தால் கேரளா மிகப்பெரிய விலை கொடுத்துள்ளது.. சுகாதார அமைச்சர் வார்னிங்
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் ஆரம்ப கட்டத்தில் நல்ல கட்டுப்பாடுகளை கொண்டிருந்த கேரளாவில் தற்போது மோசமடைந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
ஓணம் பண்டிகையின் காரணமாக கேரளாவின் நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. தினசரி புதிய கொரோனா வழக்குகள் இரட்டிப்பாகி உள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கவலை தெரிவித்தார்.
மற்ற மாநிலங்கள் கேரளாவிடமிருந்து பாடம் கற்க வேண்டும் என்று கூறிய அவர்., வரவிருக்கும் பண்டிகை காலங்களில் அனைத்து மாநிலங்களும் கவனமாக இருக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

மின்னல் வேகம்
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. உயிரிழப்பும், பாதிப்பும் தினசரி மிக அதிகமாக உள்ளது. தற்போதைய நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 9,016 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 26 பேர் இறந்தனர். மொத்த இறப்பு எண்ணிக்கை 1140 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,32,228 ஆக உயர்ந்துள்ளது, 96,004 பேர் நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருச்சூர் 1,109, எர்ணாகுளம் 1,022. கோழிக்கோடு 926,, திருவனந்தபுரத்தில் 848 கேஸ்கள் பதிவு செய்துள்ளன.

499 கேஸ்கள்
இந்நிலையில் மத்திய சுகாதார துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், அண்மைக்காலமாக கேரளாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்தது குறித்து தனது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ஜனவரி 30 மற்றும் மே 3 க்கு இடையில், கொரோனா காரணமாக கேரளாவில் வெறும் 499 பாதிப்புகள் மட்டுமே இருந்தது. வெறும் 2 இறப்புகள் மட்டுமே பதிவாகின.

கேரளாவில் அதிகரிப்பு
ஆனால் சமீபத்திய ஓணம் பண்டிகையின் போது அலட்சியத்தின் காரணமாக மிகப்பெரிய விலையை கேரளா கொடுத்துள்ளது. கேரள அரசு வர்த்தகம் மற்றும் சுற்றுலா உள்பட பல்வேறு சேவைகளை திறந்துவிட்டதால் பயணங்களின் அதிகரித்தது. பல்வேறு மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் பரவ வழிவகுத்தது. கேரளா முழுவதும் ஓணம் பண்டிகைகள் காரணமாக கேரளாவில் நிலைமை முற்றிலும் மாறியது, தினசரி புதிய கேஸ்கள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகிவிட்டன. பண்டிகை கொண்டாட திட்டமிடுவதில் அலட்சியமாக இருந்த அனைத்து மாநில அரசாங்கங்களுக்கும் இது ஒரு நல்ல பாடமாகும்.

கவனமாக கொண்டாடுங்கள்
மற்ற மாநிலங்கள் கேரளாவிலிருந்து இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். வரவிருக்கும் பண்டிகை காலங்களில் (நவராத்திரி, தீபாவளி) அனைத்து மாநிலங்களும் கவனமாக இருக்க வேண்டும். நவராத்திரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே வேளையில், பிரதமரின் அழைப்பை ஏற்று கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி பண்டிகைகளை கொண்டாட வேண்டும். பாரம்பரிய வழியில் தங்கள் அன்புக்குரியவர்களுடன் வீட்டில் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இதை மக்கள் பின்பற்ற வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications