கொரோனா பரிசோதனையில் நெகடிவ் ரிசல்ட் வந்தால் மறு பரிசோதனை அவசியம் - மத்திய சுகாதாரத்துறை
கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களுக்கு பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் அவர்களுக்கு மீண்டும் மறு பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
டெல்லி: கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், இருமல் அல்லது மூச்சு திணறல் இருக்கும் நபர்களுக்கு ரேபிட் டெஸ்டில் கொரோனா இல்லை என்று முடிவு வந்தாலும், அவர்களுக்கு ஆர்டி பிசிஆர் மூலம் மறுபரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட போது அவர்களுக்கு சில சமயம் நெகட்டிவ் ரிசல்ட் வருகிறது. அதன் பின்னர் அவர்களுக்கு சில நாட்கள் கழித்து மீண்டும் பாசிட்டிவ் வருகிறது. இந்த நிலையில்தான் கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் அவர்களுக்கு மறு பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
கொரோனா நோயாளிகளை தவற விடவில்லை என்பதை அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும் என கூறிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா நெகட்டிவ் இருந்தாலும் அவர்களுக்கு அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
2 பேருக்கு டெஸ்ட்.. கொரோனாவைரஸ் தடுப்பூசி.. சோதனையைத் தொடங்கியது ஆக்ஸ்போர்ட்
மத்திய சுகாதாரத்துறை
கொரோனா அறிகுறிகள் உள்ள நபர்களுக்கு, ரேபிட் டெஸ்டுகளில் தொற்று இல்லை என்று முடிவு வந்துவிட்டால் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தி உள்ளது. பல பெரிய மாநிலங்கள் ஏற்கனவே இருக்கும் இந்த விதிமுறையை பின்பற்றுவது இல்லை என்று இந்திய அரசு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அறிகுறி இருப்பவர்களுக்கு பரிசோதனை
காய்ச்சல், இருமல் அல்லது மூச்சு திணறல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்து, அந்த நபர்களுக்கு ரேபிட் டெஸ்டில் கொரோனா இல்லை என்று முடிவு வந்தாலும், அவர்களுக்கு ஆர்டி பிசிஆர் மூலம் மறுபரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும். கொரோனா அறிகுறிகள் இல்லாத நபர்களுக்கு ரேபிட் டெஸ்ட் எடுக்கப்பட்டு, தொற்று இல்லை என்று முடிவு வந்த பிறகு, அடுத்த 2 அல்லது 3 நாட்களில் அவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால் கட்டாயம் ஆர்டி பிசிஆர் பரிசோதனை எடுக்கப்பட வேண்டும்.
நோய் பரப்புவதை தவிர்க்கலாம்
கொரோனா அறிகுறிகள் இருந்து, ஆனால் ரேபிட் டெஸ்ட் பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என வரும் பட்சத்தில் அவர்கள் வெளியே சென்று நோயை பரப்பும் வாய்ப்பை தவிர்க்க இந்த நடவடிக்கை கட்டாயம் தேவை என்று கூறப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்த முடியும்
தவறாக தொற்று இல்லை என்று வரும் பட்சத்தில், பிசிஆர் டெஸ்டு எடுக்கப்பட்டால், நோயாளியை கண்டறிந்து அவர்களை முன்கூட்டியே தனிமைப்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு அமைப்பு
பரிசோதனையை அதிகப்படுத்த, ரேபிட் டெஸ்டுகள் உதவினாலும், பிசிஆர் பரிசோதனை முடிவுகள்தான் சிறந்தது என்றும் ஐசிஎம்ஆர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை இணைந்து அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் ஒரு கண்காணிப்பு அமைப்பு ஒன்றை ஏற்படுத்தவும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.