நாட்டில் கொரோனா குறைய தொடங்கினாலும்.. தமிழகம் உட்பட 7 மாநிலங்களின் நிலை மிக மோசம்.. மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் தற்போது கொரோனா பாசிடிவ் விகிதம் குறைந்திருந்தாலும், தமிழகம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் 2ஆம் அலை காரணமாகக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 2.76 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒருபுறம் அதிகரிக்கும் கொரோனா.. மறுபுறம் தொடர்ந்து குறையும் தடுப்பூசி பணிகள்..காரணம் என்ன
இருப்பினும், கொரோனா 2ஆம் அலையின் உச்சத்தை இந்தியா கடந்துவிட்டதாக மத்திய அரசு மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்து.
குறையும் கொரோனா
இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதார துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால், "நாட்டில் ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது. கொரனாவில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 86.7 சதவீதமாக உள்ளன. நாட்டிலுள்ள 21 மாநிலங்களில் தினசரி கொரோனா கேஸ்களைவிட குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
ஆக்டிவ் கேஸ்கள்
நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 13 நாட்களாகக் குறைந்து வருகிறது. உயிரிழப்புகளும் நாட்டில் தற்போது குறையத் தொடங்கியுள்ளது. எட்டு மாநிலங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான ஆக்டிவ் கேஸ்களும், ஒன்பது மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான ஆக்டிவ் கேஸ்களும் உள்ளன. 19 மாநிலங்களில் 50,000க்கும் குறைவான ஆக்டிவ் கேஸ்களே உள்ளன.
7 மாநிலங்கள்
இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாசிடிவ் விகிதம் 13.31%ஆக குறைந்துள்ளது. நாட்டில் டெல்லி, மகாராஷ்டிரா உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பத்து மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அதேநேரம் தமிழ்நாடு, மேகாலயா, திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் மிசோரம் ஆகிய ஏழு மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. குறிப்பாகத் தமிழகத்தின் நிலை கவலையை ஏற்படுத்துகிறது" என்றார்.
மாஸ்க்குகள்
மேலும், நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் கண்டிப்பாக மாஸ்குகளை அணிய வேண்டும் என வற்புறுத்திய அவர், ஒரு ஆய்வை மேற்கோள் காட்டி, "இந்தியாவில் 50 சதவீத மக்கள் மாஸ்க்குகளை அணிவதில்லை. மாஸ்க்குகளை அணிபவர்களில் 64 சதவீதம் பேர் வாயை மட்டும் மாஸ்க்கை கொண்டு மூடுகின்றனர். வெறும் 14 சதவீதம் பேர் மட்டுமே மாஸ்க்குகளை சரியாக அணிகின்றனர்" என்றார்