குட் நியூஸ்... 50 வயதைக் கடந்தவர்களுக்கு... அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி
டெல்லி: இந்தியாவில் மூன்றாம்கட்டமாக அடுத்த மாதம் முதல் 50 வயதைக் கடந்த 27 கோடி பேருக்குத் தடுப்பூசி வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாடுற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் கோவிஷீட்து தடுப்பூசியே நாட்டில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
அதன்படி இந்தியாவில் தடுப்பூசி வழங்கும் பணிகள் கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள ஒரு கோடி சுகாார ஊழியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் பணி
இந்நிலையில், இந்தியாவில் நடைபெறும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், "அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒரு கோடி பேருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கும் பணிகள் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்டமாக இரண்டு கோடி முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் பணிகள் பல்வேறு மாநிலங்களில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.
50 வயதை கடந்தவர்களுக்கு
இந்த இரண்டு கட்டங்களும் நிறைவடைந்த பிறகு, மூன்றாம் கட்டமாக 50 வயதைக் கடந்தவர்களுக்கு வரும் மார்ச் மாதம் முதல் தடுப்பூசிகள் வழங்கப்படும். சரியாக எந்தத் தேதியில் தொடங்கும் என உறுதியாகக் கூற முடியாது. ஆனால், மார்ச் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் தொடங்கும். இப்போது வரை சுமார் 50 லட்சம் பேருக்கு நாட்டில் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
தடுப்பூசி ஏற்றுமதி
தொடர்ந்து தடுப்பூசி ஏற்றுமதி குறித்துப் பேசிய அவர், இப்போது வரை ஆப்கானிஸ்தான்,வங்கதேசம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா என சுமார் 22 நாடுகள் தடுப்பூசி வேண்டி இந்தியாவிடம் கேட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதில் ஏற்கனவே சுமார் 15 நாடுகளுக்கு நட்பு ரீதியாக இலவசமாக 56 லட்சம் டோஸ்களும் வணிக ரீதியாக 1.05 கோடி டோஸ்களும் அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தடுப்பூசி வழங்கும் பணிகள்
இந்தியாவில் தற்போது வரை சுமார் 50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்குக் குறைந்தபட்சம் 21 நாட்கள் இடைவெளியில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், விசாரணையில் அவர்கள் உயிரிழப்பிற்கும் தடுப்பூசிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.