நீதிபதியின் சாயல், தீர்ப்பில் எதிரொலிப்பது சாபக்கேடு! சு.வெங்கடேசன் பேச மேஜையை தட்டிய எம்.பிக்கள்
டெல்லி: மக்களவையில் இன்று நடைபெற்ற 'திருத்தம் மற்றும் திரும்பப்பெறும் மசோதா 2025' மீதான விவாதத்தில், மதுரை தொகுதி சிபிஐ(எம்) எம்.பி. சு. வெங்கடேசன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். நீதித்துறையின் சுதந்திரம் குறித்து கவலை தெரிவித்த அவர், "நீதிபதியின் சாயல் தீர்ப்பில் விழுவது போன்ற சாபக்கேடு எதுவுமில்லை. தீர்ப்பு வழக்கின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட வேண்டும். ஓய்வுக்குப் பின் கிடைக்கப்போகும் பதவிக்கான 'நுழைவுத் தேர்வாக' தீர்ப்பு அமைந்துவிடக் கூடாது" என்று தெரிவித்தார்.
இந்த மசோதா 71 பழைய சட்டங்களை ரத்து செய்வதையும், சிலவற்றை திருத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், "மோடி அரசு காலனிய கால சிந்தனையிலிருந்து இந்தியாவை விடுவிக்க இத்தகைய பழைய சட்டங்களை ஒழிக்கிறது" என்று கூறினார்.

ஆனால், சு. வெங்கடேசன் இந்த மசோதாவை முழுமையாக எதிர்த்தார். நீதித்துறையில் வழக்குகள் விரைவாக தீர்ப்பளிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு வெறும் 20 நாட்களில் தீர்ப்பளிக்கப்பட்டதை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார். "நூற்றாண்டுகளாக விவாதிக்கப்பட்டு பல முறை தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு பிரச்சினையில் கூட இவ்வளவு விரைவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்த 20 நாட்களில் தீர்ப்பு வந்தது அந்த வழக்கில்தான். நீதிபதிகள் தங்கள் தனிப்பட்ட கருத்துகளால் பாதிக்கப்படக்கூடாது" என்று வலியுறுத்தினார். இவ்வாறு வெங்கடேசன் சொன்னபோது திமுக கூட்டணி எம்பிக்கள் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
நீதிபதியின் சாயல் தீர்ப்பில் விழுவது போன்ற சாபக்கேடு எதுவுமில்லை.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 16, 2025
தீர்ப்பு என்பது வழக்கில் இருந்து எழுதப்பட வேண்டும். பணி ஓய்வுக்குப்பின் பெறப்போகும் பதவிக்கான நுழைவுத்தேர்வாக அமைந்துவிடக் கூடாது.
- திருத்தம் மற்றும் திரும்பப்பெறும் மசோதா-2025 இன் மீது மக்களவையில் நடைபெற்ற… pic.twitter.com/DKIgO31EXK
மேலும், ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளின் திருத்தங்களை ஒருபோதும் ஏற்கவில்லை என்றும், சட்டங்கள் இயற்றுவதில் ஜனநாயகம் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். "கடந்த 7 ஆண்டுகளில் ஆளும் கட்சி கொண்டுவந்த மசோதாக்களில் எதிர்க்கட்சிகள் சொன்ன ஒரு திருத்தத்தையாவது ஏற்றீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
சு. வெங்கடேசன் தனது உரையின் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications