முதல் நாளே மோடிக்கு நெருக்கடி! ராகுல் ‘கை’ ஓங்குகிறதா? ரயில் விபத்து To காந்தி சிலை அகற்றம் வரை!
டெல்லி: முதல் நாள் 18வது மக்களவைக் கூட்டத்தொடரே களேபரமாகத் தொடங்கி உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மோடி அரசுக்குக் கடுமையான நெருக்கடியைக் கொடுத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகள் மோடி ஆட்சியுடன் ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய மாற்றம். ராகுல் காந்தியின் கை இந்த முறை ஓங்கி இருக்கிறதா? எனக் கேள்வி எழுந்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து பாஜக 240 தொகுதிகளில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக மோடி கடந்த 9 ஆம் தேதி பதவியேற்றார்.

அதன்பின்னர் புதிய நாடாளுமன்ற அவையில் நேற்று 18 ஆவது மக்களவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. அதன் முன்னதாக பேசிய பிரதமர் மோடி, நாட்டிற்கு வலுவான எதிர்க்கட்சி என்பது தேவை என்று பேசியிருந்தார். நேற்று முறைப்படி நாடாளுமன்ற அவையில் பிரதமர் மோடி மக்களவை உறுப்பினராக உறுதிமொழி எடுத்த போது, காங்கிரஸ் கட்சியினர் பழைய நாடாளுமன்ற வளாகத்தின் முன் இருந்த காந்தி சிலையை அகற்றியதற்காகக் கண்டன முழக்கங்களை எழுப்பி, புதிய வளாகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே, 'உதட்டளவில்தான் எதிர்க்கட்சி தேவை என மோடி பேசுகிறார். ஆனால், எதிர்க்கட்சியை அவர் விமர்சித்து தான் நேற்று பேசியிருக்கிறார். நெருக்கடி நிலை அறிவித்தது பற்றி இதுவரை மோடி நூறு முறை பேசிவிட்டார். ஆனால், நெருக்கடி நிலை என்று அறிவிக்காமலே மோடியின் ஆட்சி அப்படித்தான் உள்ளது. இதை மட்டுமே பேசிக்கொண்டே இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்யப்போகிறார்கள் இவர்கள்?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
கூட்டத் தொடர் ஆரம்பித்த முதல் நாளே அவை களேபரமாக மாறியிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியுடன் ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய சரிவு என்றே சொல்லப்படுகிறது. இதனிடையே ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், மாநிலங்களவையில் பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை விளக்கிக் கொண்டுள்ளார். இதுவும் கூட மோடி அரசுக்கு மேலும் நெருக்கடியைத் தந்துள்ளது. ஏனெனில் பாஜவுக்கு மாநிலங்களவையிலும் தனிப்பெரும்பான்மை இல்லை.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சீனிவாசன், "பழைய நாடாளுமன்றக் கட்டடத்தின் முன்பாக இருந்த இரண்டு மாபெரும் தலைவர்களான காந்தி, அம்பேத்கர் சிலைகளை எந்த அறிவிப்பும் இல்லாமல் அகற்றியுள்ளது பாஜக அரசு. அதை ஏன் அகற்றினார்கள்? ஏனென்றால், எல்லா போராட்டங்களும் அந்தக் காந்தி சிலை முன்புதான் நடைபெறும். ஆகவே, எதிர்க்கட்சிகள் போராடும் இடமாக இருந்து வந்த அந்த இரண்டு சிலைகளையும் அகற்றியுள்ளார் மோடி. வழக்கமாகத் தற்காலிக சபா நாயகர் பதவி என்பது மூத்த நாடாளுமன்ற உறுப்பினருக்குத்தான் வழங்கப்படும். அப்படிப் பார்த்தால் சுரேஷ் என்ற காங்கிரஸ் எம்பிக்குதான் அந்தப் பதவி பொருந்தும். அவர் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவர். ஆனால், பாஜக அரசு என்ன சொல்லிவிட்டது என்றால், அவர் 8 முறை வென்று இருந்தாலும் இடையில் 2 முறை தோல்வியடைந்துள்ளார். ஆகவே, கணக்கில் ஏற்க முடியாது என மறுத்துள்ளது.
அதற்கு மாறாக 6 முறை வென்றவருக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாஜக எம்பி ஒருவர் 7 முறை வென்றுள்ளார். அவரும் ஒரு தலித். அவரையும் புறக்கணித்துவிட்டார்கள். நாட்டில் 25% மேல் தலித் மக்கள் உள்ளனர். அவர்களின் பிரதிநிதித்துவத்தை அரசு முறையாக அங்கீகரிக்கவில்லை. அயோத்தியைக் காட்டிதான் ஆட்சி செய்தது பாஜக அரசு. அங்கேயே கடைசியில் தோற்றுவிட்டார்கள். உபியில் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது பாஜக. வாரணாசியில் பிரியங்கா காந்தி நின்றிருந்தால், மோடி டெபாசிட் இழந்திருப்பார் என்று ராகுல் முன்பே சொல்லிவிட்டார்.
அமேதியில் ஸ்மிருதி இராணி எங்கள் ராகுலைப் பார்த்து விமர்சனம் செய்தாரே, இப்போது வயநாடு தொகுதியில் பிரியங்கா நிற்கிறார். அங்கே ஸ்மிருதி இராணி வந்து போட்டியிடுவாரா? வந்து நின்று பார்க்கட்டுமே? நாங்க ரெடி. அவங்க ரெடியா? ராகுல் தனது எம்பி வீட்டைக் காலி செய்தபோது ஸ்மிருதி இராணி எப்படிக் கொண்டாடினார்? இப்போது தோற்றுவிட்டாரே? ஏன் எம்பிக்கு கொடுத்த வீட்டைக் காலி செய்யாமல் வைத்துள்ளார்? நோட்டீஸ் வழங்கப்பட்டும் காலி செய்யவில்லையே?
வந்தே பாரத் ரயில் விட்டதை பாஜக பெருமையாகப் பேசி வந்தது. ஆனால், பாதி ரயில் காலியாக ஓடிக்கொண்டுள்ளது. ரயில்வே துறை அறிக்கையே சொல்கிறது பாஜக ஆட்சியில் 40 ரயில் விபத்துகள் நடந்துள்ளன என்று. காங்கிரஸ் ஆட்சியில் லால்பகதூர் சாஸ்திரி பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். அதே மாதிரி இப்போது பாஜகவில் இருக்கிறாரே ஜோதிராதித்ய மாதவராவ் சிந்தியா அவரது அப்பா கூட ராஜினாமா செய்துள்ளார். இவர்கள் ஆட்சியில் யாராவது பொறுப்பேற்று ராஜினாமா செய்துள்ளார்களா?
முன்பு ரயில்வே பட்ஜெட் என்று தனியாகப் போட்டார்கள். பாஜக ஆட்சியில் அந்த பட்ஜெட்டையே நிறுத்திவிட்டார்கள். ரயில்வே பட்ஜெட் இருந்தால்தானே வரவு செலவு தெரியும்? அதையே காணோம். ரயில்வே அமைச்சக அறிக்கையே சொல்கிறது. 1.5 லட்சம் ரயில்வே பாதுகாப்புப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களில் 30 லட்சம் பேருக்கு மேல் வேலை காலியாக உள்ளது. இந்த நாட்டையே ஒருவருக்கு அடிமையாக்க வேண்டும் என நினைக்கிறது என்.டி.ஏ கூட்டணி. ஜனநாயகம் வேண்டும் எனப் போராடுகிறது 'இந்தியா' கூட்டணி" என்கிறார்.












Click it and Unblock the Notifications