ஆரம்பமே அசத்தல்.. பயிர் காப்பீடு திட்டம் தொடரும்.. ரூ.69,515 கோடி நிதி ஒதுக்கீடு.. விவசாயிகள் ஹேப்பி
டெல்லி: விவசாயிகளுக்கான பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PM Fasal Bima Yojana) மற்றும் வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீடு ஆகிய இரண்டு திட்டங்களை ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த சிறப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்றைய தினம் நடைபெற்றது.. இதில், பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டு திட்டம் ஆகியவற்றை மேலும் ஒரு வருடத்துக்கு நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

மொத்த செலவு: இதன் மூலம், 2 காப்பீட்டு திட்டங்களின் மொத்த செலவு 2020-21 முதல் 2024-25 வரை ரூ.66,550 கோடியாக இருந்த நிலையில், 2021-22 முதல் 2025-26 வரை ரூ.69,515.71 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, 2025-26 வரை நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இயற்கைப் பேரழிவுகளிலிருந்து பயிர்களை பாதுகாக்க உதவும்.
மேலும், காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை, இழப்பீட்டைக் கணக்கிடுதல் மற்றும் கோரிக்கைகளை தீர்த்து வைத்தல் ஆகியவற்றை விரைவுபடுத்துவதற்கும், மிகப்பெரிய அளவில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் அமைச்சரவை அனுமதி அளித்து, ரூ.824.77 கோடி தொகுப்பு நிதியுடன் புத்தாக்கங்கள் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிதியத்தை உருவாக்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.
பயிர் சேதங்கள்: இதன் மூலம் பயிர் சேதங்கள் விரைவில் கணக்கெடுக்கப்பட்டு, கிளைம்கள் உடனுக்குடன் வழங்கப்படும். யெஸ்-டெக், விண்ட்ஸ் போன்ற திட்டங்களின் கீழ் தொழில்நுட்ப முயற்சிகளுக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குமான நிதியளிக்க இந்த நிதியம் பயன்படுத்தப்படும்.
இதனைத்தவிர, விவசாயிகளுக்கு மலிவு விலையில் டை-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ஜனவரி 1, 2025 முதல் மறு உத்தரவு வரை கூடுதல் மானியத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ.3,850 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் மானியம், டிஏபி உரத்தின் சில்லறை விலை 50 கிலோவுக்கு ரூ.1,350 ஆக பராமரிக்க உதவுகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி பெருமிதம்: முன்னதாக மத்திய அமைச்சரவை முடிவு குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, "விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாய சகோதர, சகோதரிகள் அனைவரையும் நினைத்து நாடு பெருமிதம் கொள்கிறது. 2025-ம் ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் விவசாயிகளின் வளத்தை மேம்படுத்தும் பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது" என பதிவிட்டிருந்தார்












Click it and Unblock the Notifications