மின்சாரம் வாங்க தடை விதித்த ஒரே நாளில் 80% தொகை வசூல்! தமிழகத்திற்கு தொடரும் தடை! இப்போது என்ன நிலை
டெல்லி: சந்தையில் இருந்து மின்சாரத்தை வாங்க 13 மாவட்டங்களுக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், இதில் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய வெளிச்சந்தையில் இருந்தும் மின்சாரம் வாங்கப்படுகிறது. மத்திய அரசின் மின்துறை அமைச்சகம் இதைக் கவனிக்கிறது.
மின்துறை அமைச்சகத்தின் பவர் சிஸ்டம் ஆப்ரேஷன் கார்ப்பரேஷன் மூலம் மாநிலங்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை டிஸ்காம்ஸ் மூலம் வாங்கி வருகின்றன.

13 மாநிலங்கள்
இருப்பினும், மாநில மின்வாரியங்கள் மத்திய மின்துறை அமைச்சகத்திற்குச் செலுத்த வேண்டிய மின்சார கட்டணம் அதிகமாக உள்ளதாகக் கூறப்பட்டது. கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியே கூட இது தொடர்பாகப் பேசி இருந்தார். இந்நிலையில், சுமார் 5,083 கோடி ரூபாய் நிலுவைத் தொகையைச் செலுத்தாத தமிழ்நாடு, தெலங்கானா, பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சார வர்த்தகத்தில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

80% வசூல்
குறிப்பாகத் தமிழ்நாடு மட்டும் சுமார் 900 கோடி நிலுவை செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த தடை விதிக்கப்பட்ட மறுநாளே மாநிலங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில் சுமார் 80% செலுத்தப்பட்டு விட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தடை விதிக்கப்படும் முன் ரூ. 5,083 கோடியாக இருந்த நிலுவைத் தொகை தடைக்குப் பின்னர் மறுநாளே ரூ. 1,037 கோடியாகக் குறைந்து உள்ளது.

5 மாநிலங்கள்
தடை விதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே கர்நாடகா மற்றும் தெலங்கானா நிலுவைத் தொகையை முழுவதுமாக கட்டியதால் இரு மாநிலங்கள் மீதான தடை நேற்றே நீக்கப்பட்டது. அதேபோல சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஆந்திரா, பீகார், ஜார்கண்ட், மணிப்பூர் மாநிலங்களுக்கு விதிக்கப்பட்ட தடையும் விரைவில் நீக்கப்பட்டது. இன்னும் 5 மாநிலங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தான் தொடர்கிறது.

வர்த்தகம்
தற்போது உள்ள நிலையில், அதிகபட்சமாகக் காஷ்மீருக்கு ரூ. 435 கோடி நிலுவைத் தொகையும் மத்தியப் பிரதேசத்திற்கு ரூ. 234 கோடி நிலுவைத் தொகையும் உள்ளது. தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், காஷ்மீர், ராஜஸ்தான், மிசோரம் மாநிலங்களுக்கான தொகை தொடரவே செய்கிறது. இந்த தடை அறிவிப்பால் சந்தையில் மின்சார விலை கிடுகிடுவென உயர்ந்தது. வியாழக்கிழமை ஒரு யூனிட் மின்சாரம் 7 ரூபாய்க்கு வர்த்தகமாக இருந்த நிலையில், தடை அறிவிப்பிற்குப் பின் 12 ரூபாய்க்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

நிலுவைத் தொகை
தற்போதைய நிலுவைத் தொகையைத் தவிர, மின் பகிர்மான கழகங்கள் சுமார் ₹1 லட்சம் கோடிக்கு மேல் நிலுவைத் தொகையை வைத்துள்ளன. இவற்றை வசூலிக்கவும் மத்திய அரசு புதியதொரு திட்டத்தை அறிவித்துள்ளது. நிலுவைத் தொகையை 48 தவணைகளில் வழங்க வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. தாமதமாகச் செலுத்தப்படும் இந்த தொகைக்குக் கூடுதலாக ஃபைன் எதுவும் பெறப்படாது. இந்த ஒரு முறை மட்டுமே இந்த சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications