மிரட்டும் பைபர்ஜாய் புயல்..அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் தீவிரம் அடையும்..இந்திய வானிலை ஆய்வு மையம்
டெல்லி: அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள பைபர்ஜாய் அடுத்த 48 மணி நேரத்தில் படிப்படியாக மேலும் தீவிரம் அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், தென்மேற்கு பருவ மழை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் நிலவிய நிலையில் தற்போது அதற்கான சாத்தியக்கூறுகள் ஆரம்பிக்க தொடங்கியுள்ளன. அதற்கு ஏற்றபடி, அரபிக்கடல் பகுதிகளில் நேற்று முன் தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன் தினம் காலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த தாழ்வு மண்டலம் நேற்று முன் தினம் இரவு 8.30 மணிக்கு புயலாக மாறியது. இந்த புயலுக்கு பைபர்ஜாய் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் பேராபத்து என்பதாகும். புயலானது நேற்று காலை வடக்கு நோக்கி நகர்ந்து அதி தீவிர புயலாக வலுவடைந்தது.
அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் நேற்று இரவு 11.30 மணி நிலவரப்படி, கோவாவிற்கு மேற்கு மற்றும் தென்மேற்கே சுமார் 870 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. மும்பைக்கு தென்மேற்கே 930 கி.மீட்டர் தொலைவிலுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் படிப்படியாக வலுப்பெற்று வடக்கு வடமேற்கு திசையில் அடுத்த தினங்களில் நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் உருவான புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களில் வெப்ப அலையும் வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications