போன் செய்தால் கூட, மமதா பானர்ஜி பேசமாட்டேங்கிறார்.. ஆதங்கத்தை போட்டு உடைத்த மோடி!
டெல்லி: ஃபனி புயல் பாதிப்பு தொடர்பாக ஆலோசிக்க, மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜியை போனில் தொடர்பு கொண்டபோது, அவர் பேச மறுத்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஃபனி என்று பெயர் சூட்டப்பட்ட புயல், ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை கரையை கடந்து, மேற்கு வங்கத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி, வங்கதேசம் வழியாக பயணப்பட்டது.
இதையடுத்து, பிரதமர் மோடியும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும், இன்று ஹெலிகாப்டர் மூலம், ஒடிசாவில் சேதப்பகுதிகளை பார்வையிட்டனர். ஆனால், மேற்கு வங்கத்தில் மோடி சேதப்பகுதிகளை பார்வையிடவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

புயல் பாதிப்புக்கு முன்பு
இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம், தாம்லுக் என்ற பகுதியில், இன்று பிரதமர் மோடி உரையாற்றுகையில், "ஃபனி புயல் விஷயத்திலும், மமதா பானர்ஜி அரசியல் செய்கிறார். புயல் பாதிக்கும் முன்பாகவே, மமதாவிடம் பேசுவதற்கு முயன்றேன். ஆனால், அவர் ஆணவமாக அதை மறுத்துவிட்டார்" என்று தெரிவித்தார்.

2வது முறை அழைப்பு
ட்வீட் ஒன்றில் மோடி கூறுகையில், "மமதா எனக்கு திரும்ப கால் செய்வார் என எதிர்பார்த்திருந்தேன். ஆனால், அது நடக்கவில்லை. இருப்பினும், நானே மீண்டும் அவரை போனில் அழைத்தேன். 2வது முறையும், அவர் என்னிடம் பேச மறுத்துவிட்டார். நான் மேற்கு வங்க மக்களுக்காகத்தான் கவலை கொண்டு பேச முயற்சி செய்தேன்" என்று தெரிவித்துள்ளார் மோடி.

பதில்
பிரதமர் மோடிதான், மமதாவிடம் புயல் பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பேசவேயில்லை என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் மட்டும் மோடி பேசியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டது. இந்த நிலையில்தான், மோடி அதற்கு பதிலளிக்கும் வகையில், இன்று இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரம்
இதுகுறித்து பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், பிரதமர் பேச வேண்டும் என்பதற்காக மமதாவிற்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டதாகவும், ஆனால், அவர், பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்ததாக, மறுமுனையில் பதில் அளிக்கப்பட்டதாகவும், மறுபடி அழைப்பதாக மமதா அலுவலகம் பதில் சொன்னபோதிலும், பதில் அழைப்பு வரவில்லை என்றும் கூறுகின்றன.

இருவேறு கருத்துக்கள்
அதேநேரம், மமதா பானர்ஜி கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை, தேர்தல் பிரச்சாரங்களுக்கு செல்லாமல், காரக்பூரில் முகாமிட்டு, புயல் பாதிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மற்றும் மேற்கு வங்க முதல்வர் இருவரும், புயல் பாதிப்பு விஷயத்தில், மாறுபட்ட கருத்துக்களை கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications