பெஞ்சல் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு- ராகுல், பிரியங்கா வேதனை-காங்கிரஸ் கட்சியினருக்கு வேண்டுகோள்!
டெல்லி: தமிழ்நாட்டில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எம்பி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வங்க கடலில் மையம் கொண்ட பெஞ்சல் புயல் தமிழ்நாட்டின் வட பகுதிகளை கடுமையாக பாதித்துவிட்டது. பெஞ்சல் புயல் வங்க கடலிலேயே கடும் போக்கு காட்டியது. புதுச்சேரி அருகே கரையைக் கடந்த பின்னரும் வலுவிழக்காமல் நிலை கொண்டு வட தமிழ்நாட்டையே புரட்டிப் போட்டது பெஞ்சல் புயல். இதனால் வட தமிழகத்தின் மாவட்டங்களில் பெருமழை வெள்ளம் ஏற்பட்டது. வட தமிழ்நாட்டில் கடந்த இரு நாட்களாக இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. திருவண்ணாமலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியாகி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வட தமிழ்நாடு மாவட்டங்களில் முழு வீச்சில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசும் புயல் மழையால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ2,000 வழங்கப்படும்; சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ10,000 நிவாரண உதவித் தொகை; விவசாயிகளுக்கு 1 ஹெக்டேருக்கு ரூ17,000 நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் புயல் வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்துள்ளார். அதேபோல வயநாடு தொகுதி எம்பியும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியும் கவலை தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications