ஹரியானாவில் சிக்சர்.. காங்கிரஸ் கட்சிக்கு மகுடம்.. பாஜகவுக்கு மிக மோசமான தோல்வி.. எக்ஸிட் போல் சர்வே
டெல்லி: ஹரியானாவில் டைனிக் பாஸ்கர் என்ற அமைப்பு நடத்திய எக்ஸிட் போலில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் பாஜக படுதோல்வி அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் ஆறு இடங்கள் வரை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எக்ஸிட் போல் முடிவுகள் உண்மையானால் அங்குக் காங்கிரஸ் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்கும்.
ஹரியானாவில் சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. அங்கு மொத்தமுள்ள 90 இடங்களுக்கு இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்துள்ளது. அதில் அதிகாலை முதலே மாலை வரையிலும் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

ஹரியானா தேர்தல்: ஹரியானா மாநிலத்தில் என்ன தான் பல பிராந்திய கட்சிகள் இருந்தாலும் அங்கு நேரடி போட்டி என்னவோ பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான். இரு கட்சிகளும் தான் 90 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன. இதில் நயாப் சிங் சைனி தலைமையில் பாஜக தேர்தலை எதிர்கொண்டது. மறுபுறம் காங்கிரஸ் கட்சி பூபிந்தர் சிங் ஹூடா தலைமையில் களமிறங்கியது.
பல்வேறு காரணங்களால் இந்த முறை பாஜக மீது ஹரியானா மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்பட்டது. இதனால் தொடக்கம் முதலே அங்குக் காங்கிரஸ் கட்சி சாதகமான ஒரு நிலையே இருந்தது. இதற்கிடையே இப்போது டைனிக் பாஸ்கர் என்ற அமைப்பு ஹரியானாவில் நடத்திய எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் ஆட்சியில் உள்ள பாஜக படுதோல்வி அடையும் என்றும் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.
யார் வெல்வார்கள்: ஹரியானாவில் மொத்தமுள்ள 90 இடங்களில் காங்கிரஸ் 44-54 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் ஆளும் கட்சியாக உள்ள பாஜக 15- 29 இடங்களில் மட்டுமே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எல்டி மற்றும் பிஎஸ்பி கூட்டணி 1-5 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் ஜேஜேபி 0-1 இடத்தில் மட்டுமே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுயேச்சைகள் 4-9 இடங்களில் மட்டுமே வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணங்கள்: அங்கு பாஜக மீது மக்கள் கோபமடைய மூன்று முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலில் விவசாய போராட்டங்களை மத்திய அரசு கையாண்ட விதம், அடுத்து அக்னிவீர் திட்டம்.. மேலும், விளையாட்டு வீரர்கள் போராட்டத்தைக் கையாண்ட விதம் பாஜகவுக்குக் கெட்ட பெயரை வாங்கி கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த தேர்தல்: ஹரியானா மாநிலத்தில் கடந்த 2014இல் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், கடந்த 2019இல் நடந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 40 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் பெரும்பான்மைக்கு 6 இடங்கள் குறைவான சீட்களையே பெற்றது.
மறுபுறம் காங்கிரஸ் கட்சி 2014இல் பெற்ற இடங்களைக் காட்டிலும் 2019இல் 16 இடங்கள் கூடுதலாக அதாவது 31 சீட்களில் வென்றது. இருப்பினும், ஆட்சியை அமைக்க போதுமான இடங்களில் வெல்ல முடியவில்லை. இந்தச் சூழலில் தான் இந்த முறை பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் பெரும்பான்மையைப் பெறும் என்று சர்வே முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸிட் போல் முடிவுகள் அப்படியே உண்மையாகும் பட்சத்தில் காங்கிரஸ் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு ஆட்சியை அமைக்கும்.












Click it and Unblock the Notifications