முடக்கப்பட்ட இன்டர்நெட்டை சரிசெய்யுங்க...பிரதமருக்கு விவசாயிகள் கோரிக்கை
டெல்லி : நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ள நிலையில், அதற்கு முன் முடக்கப்பட்ட இணையதள சேவை மற்றும் தொலைத் தொடர்பு சேவையை சரிசெய்ய வேண்டும் என ஆயிரக்கணக்கான விவசாயிகள் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்ட பகுதிகளில் இணையதள சேவை, தொலைத்தொடர்பு சேவை முடக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து சர்வதேச நாடுகளும், சர்வதேச பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்த வருகின்றனர்.

சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என கூறி வரும் விவசாயிகள், நாளை சாலைகளை மறித்து போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்துள்ளனர். இந்நிலையில், தாங்கள் சாலை மறியல் போராட்டத்தை துவக்குவதற்கு முன் முடக்கப்பட்ட இணையதள சேவையை சரி செய்யும் படி பிரதமர் மோடிக்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அரசின் இந்த செயல், எதிர்ப்பு குரல்களை ஒடுக்கும் செயல் என விவசாய சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
மற்ற நாடுகளை விட 2020 ல் இந்தியா அதிக முறை இணையதள சேவையை முடக்கியதாகவும், இதனால் பெரிய அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாகவும் டாப்10 விபிஎன்.காம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேற்ற தடுப்பு சட்டம், காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்பட்ட சமயங்களில் அதிக நாட்கள் இந்தியாவில் இணையதள சேவை முடக்கப்பட்டது.
அரசிற்கு எதிராக எதிர்ப்புக்கு எழும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் இது போன்று நடைபெறுவதாகவும், மற்ற நாடுகள் எதிர்ப்புக்களை இயல்பாக எதிர்க்கொள்ளும் போது உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் இது போன்று நடப்பது சரியல்ல என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
விவசாயிகள் போராட்டம் 4 வது மாவதத்தை எட்டி உள்ள நிலையில், ஜனவரி 26 அன்று நடந்த கலவரத்திற்கு பிறகு டெல்லி எல்லையில் சிமெண்ட் தடுப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ட்விட்டரில் ModiPlanningFarmerGenocide என்ற ஹாஷ்டாக் மற்றும் அதில் பாதிவான கருத்துக்களை நீக்கும்படி ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இருந்தும் டெல்லி எல்லையில், சட்டங்களை திரும்பப் பெற கோரி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 18 மாதங்கள் சட்டத்தை அமல்படுத்தாமல் நிறுத்தி வைப்பதாக பிரதமர் விடுத்த கோரிக்கையையும் ஏற்க விவசாயிகள் மறுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications