கெடு முடிந்தது! பாகிஸ்தானியர்கள் வெளியேறாவிட்டால் 3 ஆண்டு ஜெயில், ரூ. 3 லட்சம் அபராதம்!
டெல்லி: ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் உலுக்கும் வகையில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை பஹல்காமில் பயங்கரவாதிகள் சுட்டு கொன்றனர். இந்த சம்பவத்தை அடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதில் இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று கெடு விதித்தது. இந்த காலக்கெடு முடிந்த நிலையில் பாகிஸ்தானியர்கள் வெளியேறாவிட்டால் 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்படும்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஒட்டு மொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். இந்த தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.

பஹல்காம் தாக்குதல்
பயங்கராவதிகளுக்கு மறைமுக ஆதரவு அளித்து, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட தூண்டும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட இந்தியா, அந்த நாட்டுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அட்டாரி - வாகா எல்லையை மூடியது, பாகிஸ்தானுடனான வர்த்தக உறவை நிறுத்தியது. இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
கால கெடு முடிவடைந்தது
மருத்துவம் உள்பட பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியது. சார்க் விசா வைத்து இருக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு நேற்று முன் தினம் (ஏப்ரல் 26) முடிவடைந்தது. மெடிக்கல் விசா வைத்து இருப்பவர்களுக்கான கெடு நாளையுடன் முடிகிறது.
பிசினஸ், படம், பத்திரிகையாளர்கள், டிரன்ஸிஸ்ட், கான்பரன்ஸ், மாணவர்கள், விசிட்டர், குரூப் டூரிஸ்ட், யாத்ரிகர்கள் உள்ளிட்ட 12 வகையான விசா பெற்று இந்தியாவுக்குள் வந்த பாகிஸ்தானியர்கள் ஞாயிற்றுக்கிழமையுடன் வெளியேறி இருக்க வேண்டும். குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான சட்டம் 2025 ஏப்ரல் 4 ஆம் தேதி அமலுக்கு வந்தது.
3 ஆண்டு ஜெயில் தண்டனை
இந்த சட்டத்தின் படி, விசா முடிந்து தங்கியிருப்பவர்கள், விசா விதிகளை மீறியவர்கள், தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் ஆகியோருக்கு எதிராக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 லட்சம் வரை அபராதமும் விதிக்க முடியும் என மத்திய அரசு விதித்த கால கெடு முடிந்தும் இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
இதுபோல், பாகிஸ்தானுக்கு சென்றிருந்த இந்தியர்கள் வெளியேற பாகிஸ்தான் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, கடந்த 3 நாட்களில் அட்டாரி - பார்டர் வழியாக 745 இந்தியர்கள் இந்தியா திரும்பி உள்ளனர். அவர்களில் 14 தூதரக அதிகாரிகளும் அடங்குவர். முன்னதாக இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற தொடங்கியதால், கடந்த சில நாட்களாக அட்டாரி-வாகா எல்லை பரபரப்பாக காட்சியளிக்கிறது.
வெளியேறி வரும் பாகிஸ்தானியர்கள்
கடந்த 25, 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் ஏராளமான பாகிஸ்தானியர்கள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள அட்டாரி-பார்டர் வழியாக பாகிஸ்தானுக்கு திரும்பிச் சென்றனர். 25-ம் தேதி, 191 பாகிஸ்தானியர் வெளியேறினர். 26 ஆம் தேதி 81 பாகிஸ்தானியர் வெளியேறினர். நேற்று 237 பாகிஸ்தானியர்கள் அட்டாரி எல்லை வழியாக வெளியேறினர்.
இதுதவிர விமானம் மூலமாக பிற நாடுகளுக்கு சென்று அந்த வழியாக அவர்கள் நாட்டிற்கும் பல பாகிஸ்தானியர்கள் சென்று இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தென் இந்தியாவில் மட்டும் 600 க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியரக்ள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications