நெட்டிசன்களே உஷார்.. அயோத்தி வழக்கில் அவதூறு பதிவு செய்தால் தேச பாதுகாப்பு சட்டம் பாயும்
டெல்லி: அயோத்தியா வழக்கின் தீர்ப்பு வரும் 17-ஆம் தேதிக்கு முன்னர் வெளியாகும் நிலையில் அது குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பி பதிவிடுவோர் மீது தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரப்பிரதேச போலீஸார் எச்சரித்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.
வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் கேட்கப்பட்ட நிலையில் ரஞ்சன் கோகாய் நவம்பர் 17-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே அதற்குள்ளாக அயோத்தியா வழக்கு உள்ளிட்ட ஒரு சில முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அயோத்தியா வழக்கு அல்லது தீர்ப்பு தொடர்பாக ஏதேனும் ஆட்சேபத்துக்குரிய பதிவுகள் சமூகவலைதளங்களில் வெளியாகும் என்பதால் அவை ஆய்வுக்குள்படுத்தப்படுகிறது. இதுகுறித்து உத்தரப்பிரதேச காவல் துறை டிஜிபி ஓபி சிங் கூறுகையில் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
எந்தவித காரணத்தை கொண்டும் சட்டத்தை யாரும் கையிலெடுக்கக் கூடாது. எங்களுக்கு புலனாய்வு அமைப்பு தீவிரமாக கண்காணித்து கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூகவலைதளங்களில் யாரேனும் விஷம செய்திகளை பரப்பினால் அவர்கள் மீது தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications