கடலோர காவல் படை பதவி உயர்வில் முறைகேடு.. உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்ட.. பாதுகாப்பு அமைச்சகம்
டெல்லி: இந்திய கடலோர காவல்படையில் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளித்ததில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இது குறித்து இணை செயலாளரின் கீழ் உயர்மட்ட விசாரணைக்குப் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய கடலோர காவல்படையில் பதவி உயர்வின் மூலம் கூடுதல் இயக்குநர் ஜெனரல் காலியிடம் நிரப்பப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன.

கடலோர பாதுகாப்ப படையில் உள்ள சில மூத்த அதிகாரிகள் இது குறித்துப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து இந்த பதவி உயர்வு உத்தரவுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது .
மேலும், பாதுகாப்பு அமைச்சகத்தின் இணை செயலாளர் நிலையில் உள்ள அதிகாரி தலைமையில் உயர்மட்ட விசாரணைக்குப் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்துப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இது தொடர்பாகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து உயர்வு வாரியம் கலைக்கப்பட்டது. மேலும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க இணை செயலாளர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
அதாவது ஜூனியர் அதிகாரி ஒருவருக்கு முறைகேடான வகையில் சில மதிப்பெண்களைக் கூடுதலாக அளித்து, கூடுதல் இயக்குநர் ஜெனரல் பதவிக்கு அவருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. ஊழலுக்கு எதிராக வலுவான கடுமையான நடவடிக்கைகள் அமைச்சர் ராஜ்நாத் சிங் எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த பாதுகாப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.
விசாரணையில் ஜூனியர் அதிகாரிக்கு முறைகேடான முறையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது உறுதியானால், இந்தியக் கடலோர காவல்படை சட்டத்தின் கீழ் அவர் டிஸ்மிஸ் செய்யப்படுவார்.












Click it and Unblock the Notifications